பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

சோலை சுந்தரபெருமாள்


பொண்டாட்டிய வெல கூறணும். நச்சத்தரய்யர் வாங்கணும். சந்திரமதி அல்லல்படனும்... இன்னும் எம்புட்டே கத இருக்குல்ல. நாளக்கி தான் மயான காண்டம்...”ன்னு சொல்லி முடிச்சதும் பின்னயும் நாடாவம் தொடரும்.

“மந்திரி... மாசம் மும்மாரி பொழியுதா...?”ன்னு ராஜா மந்திரியைப் பாத்து கேட்டுகிட்டுருக்கபத்தான கூட்டத்துல ஒருத்தன் கடுப்பாயி போயி கத்துவான், “மாசம் மும்மாறி என்ன நாமாறி போயிது அடுத்த வசனத்த சட்டுபுட்டுனு பேசிபுட்டு உள்ளாரப் போயித்தொலைய்யா. ஆட்டக்காரியும் காமிக்கும் வரட்டும்... யோவ் வாத்தியார தொம்பன் தொம்பச்சி உண்டாய்யா... வரச்சொல்லு. டப்பாங்குத்து போடட்டும்.” தங்கசாமிக்கு இப்பத்தான தர்மசங்கடமா போயிரும். ராசா வந்ததுலேருந்தே தொல்லமயமாயிருக்கே... ஆட்டக்காரி வுட்டு தையா தக்கான்னு ரெண்டு குதியாலம் போடச் சொன்னா தான் கூட்டத்த அசமடாக்கலாம்னு நெனச்சிக்கிட்டே “சட்னா வசனத்தை பேசிபுட்டு சீன் முடிங்கைய்யா... தொம்பன் தொம்பச்ச வுட்டாத்தான் சனம் குந்திப்பாக்கும். வந்த சனத்துல முக்காவசி சனம் எந்திரிச்சி போயித்து”ன்னு சொல்லிபுட்டு உள்ள போவாரு. வாத்தியாரு சடாருன்னு இப்புடி சொல்லிபுட்டாரேன்னு ராஜாவும், மந்திரியும் சொச்ச வசனத்த பேசாமக்கூட சீன முடிச்சிபுட்டு உள்ளாரப் போயிருவாங்க. “எப்படா ராஜபார்ட் உள்ளாரப் போவும்னு காத்துக்கிட்டிருந்த பொட்டிக்காரனும், தாளக்காரனும் அப்பத்தான நிம்மதியா மூச்சுவுடுவான்”. ராசாவும், மந்திரியும் சேந்துகிட்டு வாசிக்கிறதுக்கு டயம் குடுக்கலியே அப்டிங்குற கோவந்தான். அவுங்க போன செத்த நாளிக்கெல்லாம் பெட்டிக்காரரு பாட ஆரம்பிச்சிருவாரு. ‘டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்யமாமா டிய்யாலோ... அத்திரி பச்சா ஆளுபச்சா உய்யாலோ... தலாங்கு தரிகிட தலாங்கு தரிகிடதா... ஏ த்தா...த்தா...த்தா... டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்ய மாமா டிய்யாலோ... இப்பத்தான சனங்க மூஞ்சில அநேக சந்தோசம் தூங்கிகிட்டிருந்தவன் எந்திரிச்சி குந்துவான். மூத்தரம் பேயப் போனவன் பேஞ்சது பாதி போயாதது பாதியா ஓடியாந்துருவான். டீ குடிச்சிகிட்டிருந்தவன் கிளாசை தூக்கி வுட்டேஞ்சிட்டு காசக் குடுக்காமக் கூட ஓடியாந்து முன்னாடி எடம் புடிச்சி... குந்திக்குவான். ரோட்டுப்பக்கம் போனவன் வாய்க்காபக்கம் போனவன் நாடாவம் நல்லால்லன்னு சொல்லிகிட்டு வூட்டப்பக்கம் பாய சுருட்டிக்கிட்டு கெளம்பிப் போனவன் நாடாவம் எல்லாருமா சொராத்து கிளம்பிப் போயி 'தொம்பன் தெரம்பச்சி வந்துட்டுடோய்'ன்னு சொல்லிகிட்டு இடிச்சி புடிச்சிகிட்டு ஓடியாந்து குந்தராத்தப்பாத்தா தொம்பனையும், தொம்பச்சியையுமே கடைசி பரியந்தொட்டும் நடத்திகிட்டிருக்கலாமான்னு தான் தங்கசாமி நெனச்சிக்குவாரு.