பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

313


தன் கடையையும் மறந்து.

ரூபவதிக்கு இரண்டு பையன்கள். முதல் பையன் எட்டாம் வகுப்பு. இரண்டாவது பையன் ஐந்தாம் வகுப்பு. ரூபவதியின் கணவர் ஒரு அரசாங்க அலுவலகத்தில் டிரைவர். அதிகாரிகளோடு இன்ஸ்பெக்க்ஷன் என்று சொல்லி அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஊரில் இருந்தாலும் ‘சைடு’ பிசினசாக வீட்டு மனை வாங்க, விற்க உதவும் தரகு வேலையும் பார்க்கிற காரணத்தால் வீட்டுக்கு வர இரவு பத்து மணிக்கு மேல ஆகிவிடும். இதற்கெல்லாம் வசதியாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார்.

ஆனால், அவர் மனைவி ரூபவதிக்கோ சைக்கிள் மீது தான் மோகம் சைக்கிள், சண்முகத்தின் சைக்கிளாக இருந்தால் இன்னும் அதிக மோகம் வரும்.

காலையில் ரூபவதியின் கணவர் வெளியே போகும் பைக் சத்தம் கேட்டதும், ஒருசில நிமிடங்களிலியே சண்முகத்தின் சைக்கிள் மணிச்சத்தம் ரூபவதியின் வீட்டு வாசலில் கேட்கும். சைக்கிளை விட்டு, இறங்காமலேயே ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டு பெல்லை அழுத்துவான். சத்தம் கேட்டதும், சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வருவாள் ரூபவதி. (நிஜமாகவே ஓடித்தான் வருவாள். அப்போது அவளைப் பார்த்தால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனின் அம்மா என்றே நம்ப முடியாது. ப்ளஸ் டூ மாணவி ஒருத்தியின் துள்ளலுடன் ஓடி வருவாள்) சில வேளைகளில் ஓரிரு நிமிடங்கள் சைக்கிளை விட்டு இறங்காமலேயே பேசிக் கொண்டிருந்து விட்டு போய் விடுவான். சண்முகம். சில வேளைகளில் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போவான்.

நான் ஜன்னலுக்கு பக்கத்தில் நின்று முகச் சவரம் பண்ணிக் கொண்டிருக்கும் போது தெரியும் காட்சி அது. ஆர்வ மிகுதியால், சற்று எட்டிப் பார்த்தால் ‘அப்படி என்ன அடுத்தவங்க விஷயத்தில் அக்கறை?’ என்று கேட்டு ஜன்னலை சாத்துவாள் என் மனைவி. ஜன்னல் சாத்தப்பட்ட தினங்களில் லைட்டைப் போட்டுக் கொண்டுதான் சவரம் செய்ய வேண்டியிருக்கும்.

‘காதல் ஜோடி இருவரும் ஏன் தத்தம் கணவனையும், மனைவியையும் ‘டிவோர்ஸ்’ செய்துவிட்டு புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது?’ என்று ஒருநாள் என் மனைவியிடம் கேட்டேன்.

‘இது என்ன அமெரிக்கான்னு நினைச்சீங்களா? வாயை மூடுங்க. யாராவது கேட்டால் என்ன நினைப்பாங்க?’ என்றாள் அவள்.

அவள் சொல்வதும் சரிதான். ஏதோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் படித்தது ஞாபகம் வந்தது. வழக்கம்போல்