பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தி. ஜ. ரங்கநாதன்

சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு புதுவேகத்தைத் தந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு, முன்னோடிகளில் குறிப்பிடத் தகுந்தவர் தி.ஜ. ரங்கநாதன்.

தஞ்சைமாவட்டம் மேலவழுத்தூர் - அய்யம்பேட்டையில் பிறந்த அவரை கம்பனுக்கு வேண்டப்பட்ட ஊரில் பிறந்தவர் என்று க.நா.சு வால் செல்லமாக தட்டிக் கொடுக்கப்பட்டவர்.

"அவன் காலத்துப் பள்ளிக் கூடத்தில் கம்பன் எத்தனாங்கிளாஸ் வரையில் படித்தானோ - எனக்குத் தெரியாது. நான் எலிமெண்டரி ஸ்கூலை தாண்டியதில்லை" என்று சொல்லுவாராம் தி.ஜ.ர.

எழுத்தாளர் மத்தியில் நன்கு மதிக்கப் பெற்றிருந்த தி.ஜ. ரங்கநாதன் பல பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், பிரதான ஆசிரியராகவும் இருந்து அனுபவம் பெற்றவர். ‘எந்த விஷயத்தையும், எளிய வசனத்தில் எழுதுவதில் வ.ராவின் வாரிசாகக் கருதப்படும், இவர் வடிவ உணர்வுடன் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சிலரைப் பற்றி லேசான கிண்டலுடன், ஆனால் அழுத்தம் தொணிக்கும் சொற்களுடன் கதைகள் படைத்திருக்கிறார்' என்று சிறுகதை விமர்சன இரட்டையர்களான சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவரின் முதல் சிறுகதை ‘சந்தனக்காவடி.’ விமர்சனங்களின் பாராட்டையும் நல்ல அபிப்பிராயத்தையும் பெற்ற சிறுகதை ‘நொண்டிக்கிளி’.

சிறுகதைகளில் தடம்பதித்தவர்.

நாவல் எழுதும் முயற்சியில் இருந்தாரோ இல்லையோ... “நீங்கள் ஏன் நாவல் எழுத முயலக்கூடாது?” என்று கேட்பவர்களுக்கு அவர் அளித்த பதில் இது தான்.

“எழுத முயன்று பார்க்கவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியில்லை. பலதடவை முயன்று பார்த்திருக்கிறேன். முதல் அத்யாயத்துக்கு மேல் நகரமாட்டேன் என்கிறது. கதைக்காக உருவாக்கிக் கொண்ட மூன்று, நாலு பேர்களையும் மேலே என்ன செய்யச் சொல்வது என்று புரியவில்லை”..