பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

67


வந்து இந்தக் காட்சியைக் காணவா? இதை அவன் கனவும் காணவில்லை.

வாழ்க்கையிலே அவருடைய மன்னிப்பு ரத்தினத்துக்கு இல்லை. இனி என்ன பரிகாரம்? என்ன பிராயச்சித்தம்? செல்லரித்த அவன் மனத்துக்குக் கடைசி வரைக்கும் நிம்மதியே கிடையாது.

அவனுடைய உள்ளத்திலே, ஒரு சங்கல்பம் எழுந்தது. குருமூர்த்தியின் வீடு இன்று யாருக்குச் சொந்தமானாலும் சரி, அவர்களுக்கு என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் இந்த வீட்டை வாங்கப் போகிறான். வண்டியைத் தன் ஆயுள் வரைக்கும், குருமூர்த்தியைப் போலவே தானும் காப்பாற்றப் போகிறான். அப்புறம்? அப்புறம்? வீட்டுக் கூடத்திலே அவர்கள் இருவருடைய படங்களையும் வைத்து நித்தமும் மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கலாமா? ஐயோ! அப்போதாவது இரவிலே என்றாவது அயர்ந்த தூக்கம் வருமோ? இல்லை; வராது அவன் தான் மக்பெத்மாதிரி தூக்கத்தை என்றைக்கோ கொலை செய்து விட்டானே. அவனுக்கு இனி ஒரே தூக்கந்தான் உண்டு—கடைசிநாளில். ஆனால் கடுந்தவம் இன்றி இனி வாழ முடியாது. இன்றே அதை அவன் தொடங்கப் போகிறான்.

சிந்தனைப் புயலில் அலைக்கழிக்கப் பெற்ற ரத்தினம் ஏதோ கடின உழைப்புப் பிரிந்தவனைப்போல, உடல் சோர்ந்து அந்தப் பழைய ஓட்டுத் திண்ணையிலே போய்ப் பொத்தென்று உட்கார்ந்து, அதன் சார்மணையிலே தலையைச் சாய்த்தான். இனி என்றும் இங்கே தான் அவனுக்குப் படுக்கை. ஆனாலும், விரிப்பு மாத்திரம் ஒன்றும் கிடையாது; கண்டிப்பாய்க் கிடையாது.