பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை.

பிறந்த நாள் கொண்டாடுகிற நேரத்தில், என்னுடைய நினைவுகள் திராவிடர் கழகமாகவும், அதற்குமுன், தமிழக இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் பாயவிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து, இந்தப் படையை முறியடித்தேன்; அந்தப் படையை வென்றேன் என்று காட்டி, மேலும் மேலும் செல்வதுபோல் பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுதும் களத்தில் நிற்கிற போராட்ட மயமாகும். முதல் போராட்டம் புத்தரைப் போன்று மக்களுக்காகச் சுக போகங்களைத் துறந்ததாகும். பெரியார் அவர்களின் குடும்ப நிலை எப்படிப் பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு; வாணிபத்தில் ஆதாயம்; நிலபுலன்கள்; வீடுவாசல் -இவைகளையெல்லாம் பெரியாரவர்கள் திரும்பி ஒருமுறை பார்த்து விட்டு, இவைகள் எனக்குத் தேவையில்லை; வீட்டை மறப்பேன்; செல்வத்தை மறப்பேன்; செல்வந்தருஞ் சுகபோகங்களை மறப்பேன்; அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் என் நாட்டு மக்களுக்கு அறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன்! நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்ற மக்களுக்குச் சிந்தனைச் செல்வத்தைத் தரப்போகிறேன். பகுத்தறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன் - என்று துணிவுடன்; குறுக்கிடுவோரின் ஆற்றலை முறியடிப்பேன் என்று கிளம்பினார்களே அதுதான் முதல் போராட்டத்தில் பெற்ற வெற்றியாகும். அதற்குப் பிறகு, அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றிதான் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்று சொன்னவுடன், தேசியம் என்பது மகாபுரட்டு! இந்தியா என்கிறீர்களே அது மிகப் பெரிய கற்பனை என்று கூறி, அவை இரண்டையும் உடைத்தெறிவதுதான் என்னுடைய வேலை என்று கிளம்பினார்கள். பிறகு, ஆட்சிமொழி என்று சொல்லி, எதிர்த்த பின்னர், இப்போது இந்தி, இணைப்பு மொழி இடத்துக்கு வந்திருக்கிறதென்றால், அது பெரியாரவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான்!

மொழிப் பிரச்சினை அவர்களைப் பொறுத்தவரை மிகச் சாதாரண பிரச்சினை. தமிழ் மக்களிடையே பரவியிருக்கிற காட்டு மிராண்டித்தனமான கொள்கைகள் ஒழிந்து, மனிதத் தன்மையும்