பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

449



அண்ணாதுரை அவர்கள் வெற்றிபெறுகிறவரையிலும், அந்தச் சேதி என் காதில் விழுகிற வரையிலும், அண்ணா துரையும், அவரது கட்சிக்காரர்களும், நல்ல வண்ணம் தோல்வி அடைய வேண்டுமென்றும், காங்கிரசு நல்ல வண்ணம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டுமென்றும் மனதாரப் பாடுபட்டேன். வேண்டியவர்கள் சால்லியடைந்து விட்டார்களே என்று நான் துக்கப்படும் முன்பே, வெற்றி பெற்ற இவர்கள் என்னிடம் வந்துவிட்டார்கள். தைரியமாக வந்து என்முன் உட்கார்ந்துவிட்டார்கள். எனக்கு ஒரே வெட்கம்!

இவர்கள் என்னைப் பார்த்துவிட்டுப் போனதும், இந்த ஆட்சியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விட்டேன். என்மேல் பலருக்குக் கோபம். என்னைக் கண்டித்துக் கடிதம் எழுதினார்கள். பின்பு, மாறுபட்டவர்களும் தாங்களாகவே பாராட்ட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆட்சி நிலைக்க நானும் என்னால் இயன்றவரை எந்த விதமான ஒதுக்கலும் (without any reservation) இல்லாமல் மனதாரப் பாடுபடுவேன்!

நம்மை எதிர்ப்பவர்கள், இவர்கள் வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கிய தேசத்துரோக ஜஸ்டிஸ் கட்சிக் கும்பல் என்று, 15 ஆண்டுகளாக தான் யாருக்காகப் பாடுபட்டேனோ, அந்தக் காங்கிரஸ்காரர்கள், மிகவும் கீழ்த்தரமாக இப்போது பேசுகிறார்கள். இந்த நாட்டில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும், தலை நிமிர்ந்து நடக்கவும் செய்தது ஜஸ்டிஸ் கட்சிதான் நான் தலைவனான அந்தக் கட்சிதான் இப்போதும் ஆள்கிறதென்றால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாராக இருக்க முடியும்? ஆகவே நம்முடைய மக்கள் (இந்திய) தேசத் துரோகிகளாகவும் (தமிழ்) நாட்டுப் பற்றாளர்களாகவும் வாழ வேண்டும். இன்றைய தினம் மொழித் தகராறு வந்து ரொம்பவும் தொல்லை செய்கிறது. மாதவன் அவர்கள் டெல்லியில் மிகக் கண்டிப்பாகப் பேசி உள்ளார், அவரைப் பாராட்டுகின்றேன். தி.மு.க. ஆட்சி இந்தி வேண்டாம் என்பதில் மிகவும் கண்டிப்போடும், விழிப்போடும் இருக்க வேண்டும். இந்தி வேண்டாம் என்கிற தி.மு.க. காரர்களும், இந்தியா வேண்டாமென்கிற நாங்களும், ஒரே படகில்தான் இருக்கிறோம்.

இன்றைய தினம் சரித்திரமே கண்டிராத அளவுக்கு நமக்குப் பகுத்தறிவாளர் ஆட்சி கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு சரித்திரத்தில் ஒரு பகுத்தறிவுவாதி ஆட்சி கூட நமக்குக் கிடைக்கவில்லை. இனி எந்தக்காலத்திற்கும் இப்படிப்பட்ட ஆட்சி கிடைக்கவே கிடைக்காது!

பதவி போனதால் காங்கிரஸ்காரன், நிர்வாணமாய் நெருப்பின் மேல் நிற்பது போல் குதிக்கிறான். எப்படியாவது இவர்களைக்