பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கவிழ்த்துவிட்டுத், தான் வரவேண்டுமென்று துடிக்கிறான். அடுத்து வருவதானாலும் பக்தவத்சலம் போன்றவர்கள்தானே வருவார்கள்?

1965-ல், இந்தத் தமிழ்நாடு மந்திரிகள் யாவரும், இன்றைக்கு ஆட்சி நடத்த யோக்கியதை அற்றவர்கள், என்று எழுதிப் புத்தகமே போட்டிருக்கிறேன்! அன்றைக்கு இதையெல்லாம் கேட்டுக்கொண்டு, என்னைத் தலைவன் என்று அன்றைக்குச் சொன்னவன், இப்போது பதவி போனதும் குதிக்கிறீர்களே!

நான் முதலில் இந்த ஆட்சி 5 வருடம் இருந்தால் போதும் என்று நினைத்தேன். நீ நடந்து கொள்வதைப் பார்த்தால், இந்த ஆட்சியே இன்னும் பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றல்லவா நினைக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும். யாருக்காக? நம் (தமிழர்கள்) நன்மையைக் கருதி.

காமராசர் வந்த பின், கல்வி - தொழில் அபிவிருத்தியும், பொருளாதார உயர்வும் ஏற்பட்டதால், நான் காமராசரை, காமராசர் ஆட்சியை, ஆதரித்தேனே தவிரக் காங்கிரசை அல்ல!" என்று விளக்கியுள்ளார் பெரியார்.

“காங்கிரஸ்காரர்களே! உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்! தி.மு.க.வை எதிர்க்காதீர்கள்! ஆதரியுங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்தார் பெரியார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்று, 23.9.67 அன்றையத் தலையங்கத்தில் சிவசேனைக் கொடுமைகளை விவரித்துவிட்டு, “இப்போது நாம் கொண்டாட இருக்கும் கண்டன நாள் நாசவேலையல்ல. யாருடைய சொத்துக்கும் சிவசேனைக்காரர்களைப் போல் நாம் சேதம் விளைக்க மடட்டோம். பம்பாயிலுள்ள நமது தமிழனை மேலும் உதைபடாமல் இங்கே அழைத்துக் கொள்ள; இங்கிருந்து நமது செல்வம் ஒரு துளியும் வெளியே போகாமல் தடுக்கத்; தமிழ்நாடு சுதந்தர ஸ்தாபனம் ஒன்றை உருவாக்குவோம்” என்று பெரியார், உருக்கமாக, ஒன்றரைப் பக்கம் எழுதினார்.

சென்னையிலுள்ள நண்பர்கள் கழகம், பெரியார் திடலில் பெரியாருக்கு நடத்திய பிறந்தநாள் பாராட்டு விருந்தில், அமைச்சர் மாதவன், ஏ.என். சட்டநாதன், டாக்டர் ஆர். ஜி.கிருஷ்ணன், மேஜர் ஜெனரல் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சண்முகம் நன்றி கூறினார். இங்கு பேசும்போது, பக்தவத்சலம் தமது ஆட்சியில் செய்த ஓர் இனத்துரோகத்தைப் பெரியார் வெளியிட்டார். பஞ்சாயத்துப் படிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த “விடுதலை” 2,000 பிரதிகளை நிறுத்திப், பதிலுக்கு, ராமசுப்பய்யரின் “தினமலர்” அனுப்ப ஏற்பாடு செய்தாராம், அந்த மகானுபாவர்!