பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



தலைமை நீதிபதி கஜேந்திரகட்கார் பம்பாய்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். எம்.ஆர். ராதாவுக்காக. மோகன் குமாரமங்கலம் வழக்காடினார். அரசுத்தரப்பில் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் வாதத்தை முடித்திருந்தார். தருமபுரியில் நவம்பரில் பெரியார் சிலை திறக்கப்படும் என்று செய்தி வெளியாயிற்று. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது அரசியல் அவகேடாகும் என்று அண்ணா சொன்னார்.

பெரியாருடைய தூண்டுதலால் (ஒத்துழைப்பால்) நலம் நாடுவோர் கழகத்தின் சார்பில் 3.10.67 அன்று அண்ணாவுக்கும், அமைச்சர்களுக்கும், முக்கியமான சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்மட்ட அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில், பிரியாணி விருந்து, மிகப்பெருமளவில் சிறப்புடன் அளிக்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவின் ராஜிநாமாவால், இடைத் தேர்தல் ஏற்பட்டது. புது முகமாயிருக்க வேண்டுமென்ற அண்ணாவின் ராஜதந்திர மூளையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி மாறன் தி.மு.க. வேட்பாளர்! ராஜம் ராமசாமி காங்கிரஸ் வேட்பாளர். “ஆங்கிலம் வேண்டுமானால் முன்னவரையும், இந்தி வேண்டுமானால் பின்னவரையும் ஆதரிக்க வேண்டியதே தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் நமது கொள்கையாகும்” என்றார் பெரியார்.

“மனிதனே சிந்தித்துப்பார்! உன்னையும் ஆரியனையும் ஒப்பிட்டுப்பார்? இந்தி ஏகாதிபத்யம் ஒழிய, இந்திய ஏகாதிபத்யமோ, யூனியனோ, ஒழிய வேண்டும். இது உடையாத வரையில் ஜாதித்திமிரும், ஆணவமும், ஈனத்தனமும் ஒழியாது ஒழியாது ஒழியாது! தமிழ்த் தம்பிமார்களே! என்னை நீங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது! நான் துறவி; அதிலும் இந்தத் துறவிக்குக் கடவுளே துரும்பு! காமராஜர் அமைத்த அஸ்திவாரத்தின்மீது ஆட்சி நடத்த ஆளில்லை. அதனால் வெட்கப்படாமல், அண்ணாதுரை ஆட்சியைப் பலப்படுத்துங்கள், ஆரியனுக்கு அடிபணியாத ஆட்சி இது! காங்கிரஸ்காரர்களே! இந்தியை தேசிய மொழியாக்கி, இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். புலவர்களே! நீங்களே முன் வந்து இப்போது கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். தமிழன் காட்டுமிராண்டி என்பதற்கு இன்னும் தீபாவளி கொண்டாடுகின்ற ஒரு சான்றே போதாதா?” இந்தக் கருத்துக்கள் அக்டோபர் திங்களில் பெரியார் சுற்றுப் பயணங்களிலும், கட்டுரைகளிலும் சிதறிய முத்துகளாகும். திருச்சி வழக்கறிஞர்கள் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, உதகை குன்னூர் ஆகிய நீலமலைப் பகுதிகள், சிதம்பரம், சீரங்கம், வாழ்குடை போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தார் பெரியார்.