பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தந்தை பெரியார்


21. வைக்கம் வாழ்த்திய வீரர் ஈ.வெ.ரா.

"மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ; பூமிப்பிளப்பில் அமிழச் செய்யாமலோ; சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."

- தந்தை பெரியார்

கேரளாவில் வைக்கம் என்பது மிகவும் அழகான ஊர். இங்குள்ள கிருஷ்ணன் கோவில் மிகவும் பிரசித்தமானது. நாட்டில் நாலா திசைகளிலிருந்தும் மக்கள் வைக்கம் வந்து கண்ணனை தரிசனம் செய்து போவார்கள்.

ஆனால் -

உள்ளூரில் வசிக்கின்ற அரிசனங்கள் ஆலயத்தின் அருகில் கூடப் போகக் கூடாது.

உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்வதற்குக்கூட அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது.

காங்கிரஸ் இயக்கத்தின் சிறந்த கொள்கைகளில், தீண்டாமை ஒழிப்பு முக்கியமானதாகும்.