44
தந்தை பெரியார்
பதிலும் நானே...
"என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்."
"கட்டிக் கொடுத்த சோறும்; சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு வரும்? சுயபுத்தி வேண்டாம்! ஊரிலே தலை காட்ட முடியலே; எவன் எவனெல்லாமோ முதுகுக்குப் பின்னாடி பேசிட்டுத் திரியறான்.”
வெங்கடப்ப நாயக்கர் கோபத்தின் உச்சியிலிருந்து வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்.
ஒரு விசாரணையின் நிமித்தம் தூண் ஒரமாகக் கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராமசாமி, தாயாரைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சரி... சரி....விடுங்க... யாரோ சொன்னதுக்காக, இப்படி ஏன் கோவப்படறீங்க.பாவம், அவன் கொழந்தைதானே! எல்லாம் போகப் போகச் சரியாயிடும்.”
"நிச்சயம் சரியாகாது. பாட்டி வீட்டிலே செல்லம் குடுத்துக் கெட்டுப் போறான்னு, இங்கே கூட்டிட்டு வந்தோம். கொழந்தை, கொழந்தைன்னு, இங்கே நீயும் அதே காரியத்தைச் செய்து அவனைக் குட்டிச் சுவராக்கிட்டே.