பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தந்தை பெரியார்


11. ஈரோட்டில் நிச்சயிக்கப்பட்ட
திருமணம்

"ஆணுக்குப் பெண் சரிநிகர் ஆவாள். சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்று ஆள் அல்ல பெண்! அடிமை இல்லை அவள்! சமமானவர் - வாழ்க்கைத் துணைவி அவள்."

- தந்தை பெரியார்

உலகில், எல்லா நற்குணங்களும் பொருந்திய ஒருவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது.

வெங்கடப்பர் சிறந்த பக்திமான், நேர்மையானவர், உழைப்பாளி, இரக்க குணமுடையவர், திறமையான வியாபாரி - இத்தனையிருந்தும், பகுத்தறிவுப்பார்வையில் அவர் பின் தங்கி விட்டார்.

மண்டிக்கடையை மகனிடம் ஒப்புவித்த சில வருஷங்களிலேயே இராமசாமியின், அதிபுத்திசாலித் தனத்தையும், வாதத்தில் மற்றவர்களை மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலுள்ள திறமையையும் கண்டு வியந்து போனார்.

பணம் கொடுப்பதிலும்; வராத கடனை வசூலிப்பதிலும் இராமசாமி காண்பிக்கும் கறாரும் கண்டிப்பும், தந்தையை பிரமிக்கச் செய்தது.

இராமசாமியின் அறிவுக் கூர்மையும், தொழில் திறமையும் வியாபாரிகளிடையே பிரபலமாயிற்று.

மண்டிக்கடைக்காரர்கள் மத்தியிலே ஏற்படும் சண்டை சச்சரவுகள்; கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் தகராறுகள், இவை எதுவானாலும் மத்தியஸ்த்தத்திற்கு, அவர்கள் இராமசாமியிடம்தான் வருவார்கள்.