பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தந்தை பெரியார்


ஒரு திருமணத்திற்கு, இதைவிடச் சிறந்த வேறு என்ன பொருத்தம் வேண்டும்!

நாகம்மையின் பெற்றோர், பெரிய செல்வந்தர்கள் அல்ல என்றாலும்; பொருளாதார நிலையை ஒரு பொருட்டாக இரு குடும்பத்தாரும் கருதவில்லை. சாத்திர சம்பிரதாயங்களோடு, ஈரோடு நகரமே வியக்கும் வண்ணம் அதிவிமரிசையாக இராமசாமி நாகம்மை திருமணம் நடைபெற்றது. இராமசாமிக்கு அப்போது வயது 19, நாகம்மையாருக்கு வயது 13.

திருமணத்திற்கு ஏராளமான பிரமுகர்களும், வியாபாரிகளும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

நம்ம நாயக்கர் வீட்டுத் திருமணம் என்று ஊரே திரண்டு வந்து பந்தலில் கூடியிருந்தது.

இராமசாமி மறவாமல் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

பிள்ளைப் பிராயத்தில் படிப்பு;

வாலிப வயதில் திருமணம்.

இராமசாமி இந்த இரண்டாவது கட்டத்தில் இருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு பொறுப்பும், கடமைகளும் அதிகம் என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

ஆனால் இராமசாமி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே இருந்தார்.

இன்னும் சொல்லப் போனால் - தொட்டதற்கெல்லாம் பெற்றோரின் தலையீடு இல்லாத ஒரு சுதந்திர மனிதனாகவே இப்போது அவருக்குத் தோன்றியது.