பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

89



குரலைக் கேட்டதும் அருகிலிருந்த மகனை வாரி அணைத்துக்கொண்டார். அவரது விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. செல்லமாக வளர்த்த பிள்ளை எப்படியாகி விட்டான்.

- உடல் இளைத்து மீசையை எடுத்து உருமாறிப்போயிருந்த மகனின் உச்சியில் முத்தமிட்டார்.

அவன் தன்னை விட்டுப் போனதிலிருந்து அன்று வரை அவனைத் தேடித்தேடி அலைந்த ஊர்களையும் அனுபவித்த வேதனைகளையும் வெங்கடப்பர் சொல்லி அழுதார்.

"உனக்குத் தெரியுமா! நீ போனதிலிருந்து உன் அம்மா படுத்த படுக்கையாகி விட்டாள். எங்களை எல்லாம் விட்டு எங்கே போயிருந்தாய் இராமா" என்றார் வெங்கடப்பர் குரல் தழுதழுக்க.

"அப்பா! நான் துறவியாக வேண்டுமென்று காசிக்குப் போனேன். ஊரில் நம்முடைய அன்னச் சத்திரத்தில் எவ்வளவோ பேர் சாப்பிடுகிறார்கள். காசியில் எனக்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்க வில்லை. தெருவில் பிச்சை எடுத்தேன்; எச்சிலை சாப்பிட்டேன்..." என்று கூறிக்கொண்டு வரும் பொழுதே இராமசாமி அழுதுவிட்டார்; அது கண்டு அப்பாவும் அழுதார்.

"இனிமேல் நான் உன்னை எதற்காகவும் கோபிக்க மாட்டேன். வா, ஊருக்குப் போவோம்" என்று அழைத்தார்.