பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தந்தை பெரியார் சிந்தனைகள்



அந்தக் காரணத்துக்குப் பயன்படும்படியான மொழிதான் நமக்கு வேண்டும்.

(iii) தேசிய மொழி என்றாலே நாட்டுமொழி என்றுதானே பொருள்? அப்படிப்பார்த்தால் சுதந்திரத்தமிழனுக்குத் தமிழ் அல்லாத வேறு எந்த மொழியும் அன்னியமொழிதானே? அப்படியிருக்க இன்று தேசியமொழி என்பதும் தேசம் எவன் ஆதிக்கத்திலிருக்கின்றதோ அவன் மொழியாகத்தானே ஆக்கப்பெற்றிருக்கிறது? தமிழனுக்குத் தமிழ்நாடுதானே தேசம்? தேசம் என்றால் நாடு என்றுதானே பொருள்?

(iv) எதற்கெடுத்ததாலும் பெருமையையே பேசிக்கொண்டு தாய்மொழி, வெங்காயம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உலகத்தோடு போட்டியிடமுடியும்? உலகமே ஒருமொழிக்கு வரவேண்டும். அப்போதுதான் உலகமக்களோடு போட்டிபோட்டுப் பழக வாய்ப்பு ஏற்படும்.

(v) மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்யவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்? அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

(vi) மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது. அரசின் ஆதரவின்றேல் ஒரு மொழி எவ்வளவு சிறப்புடையதாயினும் அதன் வளர்ச்சி மிகவும் தடைப்பட்டே நிற்கும் (இன்று தமிழ்மொழி இந்திய அரசியல்மொழியாகச் செய்ய கலைஞர் ஆட்சி முயன்று வருகின்றது).

இவற்றால், தந்தை பெரியார் அவர்கள், பயன்படும் முறையால்தான் ஒரு மொழியின் பெருமை அமைகின்றதேயன்றி வேறு எவற்றாலும் மொழிக்குப் பெருமை இல்லை என்ற கருத்துடையவர் என்பதை நாம் அறிய முடிகின்றது.

(2) தமிழ்: தமிழ்க் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்ததுபோல வேறு எந்த மொழியையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்தததில்லை. ஒரு காவியத்தில் அல்லது புராணத்தில் இம்மொழிப்புகழ்ச்சி இடம் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக,


பொருப்பிலே பிறத்து, தென்னன்
புகழிலே கிடந்து, சங்கத்து