பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
மனிதஉரு வெடுத்துக் கொண்டே! (13)

விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
செயச்செய்த வீரப் பேச்சை
எழுந்துதமிழ்ச் சொற்களினால இளைஞர்களைத்
தட்டிவிட்ட இலக்கி யத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
செயஅன்றே கொளுத்தி விட்ட
செழுந்தமிழின் வீறாப்பைச் செவிமடுத்தோர்
உணர்வடைந்தார்! சிங்க மானார்! (14)

தாய்மொழியைக் காப்பாற்றத் துடிந்தெழுந்து
கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
சிறைகூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார் அரசியலார்
கைவிட்டார் பொருமிற் றுள்ளம் ! (15)

மறைமலையார் தமிழ்களித்த திருநீலாம்
பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை “தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்”டில்
கூடிநின்றோர்[குறிப்பு 1] நெஞ்சில் பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
வரலாறோ சிலம்புக் காதை! (16)

தாத்தாவைச் சிறையிலிட்டுத் தமிழர்களை
எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார் அவ்வரசியலார் பயனில்லை!
தமிழகத்தைப் பாரதத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு தமிழர்க்கே”
எனுந்திட்டம் தமிழர்க் கீந்தார். (17)

தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்
சிறையிருக்கும் தாத்தா வைப்போல்


  1. நவம்பர் 13, 1835இல் கூட்டப்பெற்றது.