பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(3) ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவது பார்ப்பன முறை. ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை என்பதும், பெண்ணுக்கு உள்ள கட்டுப்பாட்டைப் போல ஆணுக்கு இல்லை என்பதும் பார்ப்பனர்களின் நாகரிகமுறை. அதைச் சித்திரிப்பதே சிலப்பதிகாரம்.

(4) சிலப்பதிகாரம் விபசாரத்தனத்தில் தொடங்கி, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த கருவூலமாகும்.

(5) சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்ற இலக்கியங்களில் உள்ளவை எல்லாம் கற்பனை (புளுகு). அதிலிருந்து மக்கள் அறிவு வளர்ச்சியோ, ஒழுக்கமோ, நீதியோ கற்றுக்கொள்ளுகிறமாதிரி இல்லை. அவை கற்பனைப் புளுகுக்கு, இலக்கியச் சிறப்பு வாய்ந்தனவாக இருக்கலாம். அவை புலமைக்குத் தான் பயன்படும். அறிவு ஒழுக்கத்திற்கான சங்கதி அதில் இல்லை.

அன்பர்களே, இதுகாறும் நாம் பெரியார் அவர்களின் கருத்துப்படி இலக்கியம் பயனைக் கருதித்தான் இருக்கவேண்டும் அல்லது நீதியைக் கருதியாவது, ஒழுக்கத்தைக் கருதியாவது இருக்கவேண்டும் என்று அறிகின்றோம். சுருக்கமாகச் சொன்னால் உலகாயதத்தைக் கருதியே அவர் நோக்கம் அமைவதாக உள்ளது எனலாம். இத்துடன் இன்றைய பொழிவு நிறைவு செய்வதற்குமுன் பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளை உங்கள் முன் வைக்க நினைக்கிறேன்.


9. பெரியார் பற்றி அறிஞர்கள்

(1) “நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தியபின்னர் அவர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கனமழையாகும்; கல்மழையாகும்; மழை மூன்றுமணி நேரம், நான்கு மணிநேரம் பொழியும். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் -கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர் ”

-திரு.வி.க.

(2) “எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்த்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ-அங்கங்கெல்லாம் ஈ.வே.ரா.வின் பெயர் ஒளி வீசித் திகழ்கின்றது.”

-சர். ஏ.இராமசாமி முதலியார்.(1928)