பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தனித்தமிழ்க் கிளர்ச்சி



திண்ணியநல் மறஇளைஞர் திகழ்ந்து விளங்கிடும்
தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானை
தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்
நண்ணு பிறநாட்டார் நகருவரோ அம்மானை
நகராது தமிழ்க்குழைத்தால் நலம் பெறலாம் அம்மானை (68)

தழைத்த தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் நன்மையுற
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதுகாண் அம்மானை
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதாம் என்றக்கால்
உழைப்பின்றிச் சிலரிங்கு உறங்குவதேன் அம்மானை
உறங்குபவர் நாட்டிற்கு ஒரு சுமையாய் அம்மானை(69)

ஆக்கம்

அமிழ்தான வளம்பலதாம் அமைந்த திருநாடாம்
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டும் அம்மானை
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டு மாயிடினே
இமிழ்கடல்சூழ் உலகாட்சி இயற்றுமோ அம்மானை
இயற்றல் தமிழ்க்கெளிதாம் இயற்கையுமாம் அம்மானை (70)

இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரிய
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானை
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்
தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானை
இல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை (71)


68 - தமிழ்நாடு தமிழர்க்கே இருப்பினும் தமிழ்க்குத் தீங்கு செய்யாது உழைத்தால் பிறநாட்டினரும் தமிழ்நாட்டில் வாழலாம்.
69 - உழைப்பின்றி உண்டுகளித்து உறங்குபவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை. பெருஞ் சுமையே அவர்கள்.
70 - தமிழ்நாட்டு நிலையங்கள் ஒவ்வொன்றிலும் தமிழே தலைமைப் பதவியேற்று ஆட்சி செய்யவேண்டும். அவ்வாட்சி தமிழ்க்கு மிக எளிதே.
71 - தமிழர்கள் இயன்றவரை தனித்தமிழிலேயே எழுதவேண்டும். தமிழில் சில சொற்கள் இல்லையேல் புதிதாய் உண்டாக்க வேண்டும்.