பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

37



தமிழல்லா மொழிகளில் தங்கியநற் கருத்துளைத்
தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் அம்மானை
தமிழில் மொழிபெயர்த்துத் தந்தால் இனிமேல்நம்
தமிழில் புதுச்சொற்கள் தழைக்குமால் அம்மானை
தழைக்கின் அதுவுமொரு தனியழகாம் அம்மானை (80)

உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்
அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானை
அயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்
உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானை
உயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை (81)

தமிழ்நாட்டெல்லை

நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லை
தென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானை
தென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்
இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை(82)


79,80 - தமிழில் இருந்த விஞ்ஞானம் முதலிய பல துறைநூற்கள் கடற்கோள் முதலியவற்றால் அழிந்தன. இனி அயல்மொழிகளிலுள்ள விஞ்ஞான முதலியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளவேண்டும்.

81 - எல்லாக் குலத்தினரும் பலதுறை நூற்களைக் கற்றால் உயர்ந்த குலத்தோர்க்குத் தாழ்ந்த குலத்தோர் அடங்கமாட்டார்கள் என்று சிலர் குறுகிய நோக்குடன் கூறுகின்றனர். இனியும் உயர்வுதாழ்வு கருதின் செங்கோல் தண்டிக்கும். ஒறுப்பு - தண்டனை.