பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவய்யங்கார்

17


பட்டனரோ வென்று நினைக்கின்றேன். சாளுக்கியரை அயோத்தியினராகக் கூறிய சாசனங்கட்கும், ஆசிரியர் பில்ஹணருக்கும் கி.பி. 1012) மிகவும் முற்பட்டவராகிய சங்கப் புலவர் கபிலரும் அவருக்கு நெடுஞ்சேய்மையராகாத திவாகரரும், முறையே தெளிந்தோதிய துவரை என்னும் பெய க்குரிய ஊரும் வேள்புலம் எனப்பட்ட நாடும் யாண்டு ஒருங்கியைந்து காணலாம். ஆண்டே இவ்வேள் வேந்தர் தோற்றஞ் செய்த ஆதியிடம் உள்ளதெனத் துணிவதே பொருத்தமாகும். இனிக் காம்போச நாட்டுத் தலைநகரென்ற துவாரகாவைத் துணியலாமெனின் அந்நாடு வைதீக மொழிக்கும் ஒழுக்கத்திற்கும் புறம்பான வேற்று மொழியாளருடையதாக யாஸ்கர் நிருக்கத்திற் கூறுதலான் வைதீக வொழுக்கம் போற்றிய இவ்வேள் வேந்தர்க்குரிய தாகக் கருதற்கில்லையென்க. வேள் ஆஅய் நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அளித்த வரலாற்றான் இவ்வேள் குலத்தவனுடைய வைதீக ஒழுக்கம் உணரலாமே. அன்றியும் காம்போசம் வேள்புலமென்றற்கு ஆதாரமில்லாமையும் நோக்குக இங்ங்னமே குமாயூன் ஜில்லா 'த்வாராஹத்' முக்கிய ஊர்களும் இவரூராகாமை உய்த்துணர்ந்து கொள்க.

காஷ்மீரத் துவாரகை

இனி எஞ்சியன காச்மீரதேயத்து ஜெயபுரத்துவாரவதியும் அங்குள்ள வராஹமூலத்வாரவதியுமேயாகும். இங்கு முன் வைத்த த்வாரவதி கி.பி. 751-க்கு முற்பட்டவனாகாத ஜயாபீடன் என்னும் வேந்தன் காலத்து உண்டாக்கப்பட்ட தென்று ராஜதரங்கினியால் (IV-511) அறியப்படுதலான், இதுவும் கபிலர் குறித்த துவரையாகாமை நன்கு தெளியலாகும். இனி இறுதியாய் நின்றது காச்மீர் நாட்டு வராஹமூலத்வாராவேயாகும்.அது பொய்யா நாளிற் புலவர் பெருமானான கபிலர், வேளிர் ஊராகக் குறித்ததாகுமா என்று ஆராய்வோமாக.