66
தமிழகக் குறுநில வேந்தர்
துணியப்படுமென்க. இவன் மாறன் என்று பெயர் பூண்டது பாண்டியர்க்குரிய நண்பினனாய் அவனுக்குப் பெருந் துப்பாகிய தன்மை பற்றி யென்றுணரலாம்.
இங்ஙனங் கொள்ளாது ஈண்டு மாறன் பாண்டியன் என்றாற் “பாண்டியன் தலைவனாகச் சென்றடு கோசர் நிற்புகழ்ந்தேத்த உறைமதி” என்று பொருள் பட்டு இவ் வாழ்த்துக் கேட்கின்ற பாண்டியனினும் வேறோர் பாண்டியன் றலைவனாகக் கோசர் சென்றடுதல் தோற்றி நிற்பதனால் அது பொருளாகா தென்க. நச்சினார்க்கினியர்க்கே இது திருவுள்ள மில்லாமையாற் “குறுநில மன்னன் என்றலுமொன்றென”ப் பிறிதொன்று கூறியொழிந்தார் என்க.
மாறன் றலைவனாகக் கடந்தடு கோசர் நின்வாய் மொழி கேட்ப என்றதன் பின், ஐவருட்படப் புகழ்ந்த அவரும் பிறரும் நிற் புகழ்ந் தேத்த என்றது, குறுநில மன்னராகிய ஐம்பெரு வேளிரும், பெரு வேந்தராகிய பிறரும் நின்னைப் புகழ்ந்து வாழ்த்த என்றவாறாம்.
இவற்றாற் கோசரும் கோசர் தலைவனாகிய மாறனும் பாண்டியற்குத் துப்பாதல் நன்கு துணியலாம். இதனாலிவர் பாண்டியராற் சிறப்பிக்கப் பெற்று வாழ்ந்தது உய்த் துணரலாகும். மேலும் மதுரைக் காஞ்சியுள், (507-510)
“மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூ ரவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமே எந் தோன்றிய நாற்பெருங் குழுவும்”
எனக் கூறுதலான் மோகூர் மன்னனாகிய பழையனுக்கும் கோசருக்கும் ஒரு தொடர்புண்மை புலப்படுவது இல்லையேல் இவன் மோகூரவையகம் விளங்கும் வண்ணம் இக்கோசர் சமயத்து வந்து தோன்ற வேண்டியது இல்லையா மென்க.