பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. [1]சேதுநாடு

தெய்வங்கொள்கையானும் தெய்வஞானங்களானும் அவைபற்றிய பெருநூல்களானும் எவ்வுலகுந் தொன்று தொட்டே ஏத்துஞ் சிறப்புடைய இப்பரதகண்டத்துக்கு இருபெருவரம்பாகவுள்ளன ஸேதுவும் இமயமும் என்ப; “ஆஸேது ஹிமாசலம்” என்பது வழக்கு. இங்ஙனம் ஸேதுவையும் இமயத்தையும் இருபேரெல்லையாகக் கொண்ட இப்பரத கண்டத்தை வடநாடு, தென்னாடு என இரண்டாகப்பகுத்திடை நின்று விளங்குவது திருவேங்கட மெனுந்தெய்வமாமலையாம். திருவேங்கடத்துக்கு வடக்கிலுள்ள மக்கள் வழங்குவது ஆரியம்-வடமொழி எனவும், அதற்குத் தெற்கிலுள்ளமக்கள் வழங்குவது தமிழ்-தென்மொழி எனவும் பெயர்பெறும். கல்வியிற்பெரிய கம்பரும் “வடசொற்குந் தென்சொற்கும் வரம்பிற்றாய் - நான் மறைக்கு மற்றை நூற்கு, மிடைசொற்ற பொருட்கெல்லா மெல்லைய தாய்................ ஓங்கியவேங்கடத்திற் சென்று அதிர்மாதோ” என்பதனா லிதனை விளக்கி யுரைத்தார்.

சேது என்பது சீராமமூர்த்தி கடல்மேலிட்ட திருவணை. இது கன்னியாகுமரிமுதற்றென்பது, மணிமேகலை நூலுள், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியகாதைக்கட் “குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப், பரந்து சென் மாக்களொடு தேடினன் பெயர்வோன்” என வருதலா னறியப்படும். இதனாற் குமரியை யெல்லை யாகக்கூறுமிடனெல்லாம் சேதுவைக்கூறின் அது தவறாகாதென்று தெளியலாம். இச்சேதுவை யணித்தாவுள்ள பூமி ஸேதுநாடு, ஸேதுராஜ்யம் என்று பெயர் சிறக்கும்.


  1. இது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பதின்மூன்றாம் வருஷக்கூட்டத்திற் படிக்கப்பெற்றது.