பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

நீலகிரி மலையில் குடியேறினர். எனவே, நீலகிரிக் குறும்பர்கள் பல்லவர்களாக இருக்க முடியாது.

ஊர்க்குறும்பரைத் தவிர மற்ற இரு இனத்தாரும் கூச்சம் கொள்ளும் இயல்பினர். ஆனால் கோழைகளல்ல. வெள்ளையரைக் கண்டால் முன்பெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள். குறும்பர் வாழும் சிற்றூர் 'மோட்டா' என்றும், 'கம்பை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது 'குலக்கம்பை, மஞ்சக் கம்பை' என்று வழங்கும் இடங்களில் குறும்பர் வாழ்வதில்லை. ஆனால் முதலில் அவ்விடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அப்பெயர்களால் அறியலாம். ஒவ்வொரு கம்பையிலும், சுமார் பன்னிரண்டு குடிசைகள் இருக்கும். இக்குடிசைகள் மண்ணினால் கட்டப்பட்டுப் புற்களால் கூரை வேயப்பட்டவை.

தோற்றம் :

குறும்பர்கள் கருநிறமும், குள்ளமான உருவமும், ஒற்றை நாடி உடலும் பெற்று, தோற்றத்தில் இருளர்களைப்போல் விளங்குகிறார்கள். இவர்கள் தலையிலுள்ள மயிர் தடிப்பாகவும் சுருண்டும் இருக்கும்; தலையைச் சுற்றிப் புதர் போலப் பரவி முளைத்திருக்கும், பெண்கள் ஒரே ஒரு துணியை ஆடையாக அணிகின்றனர். மார்பை மூடும்படியாக அக்குளைச் சுற்றி அத்துணியை முடிந்து கொள்கின்றனர். முழந்தாள் வரையில் அத்துணி கீழே மறைத்துக்கொண்டிருக்கிறது.

மொழி ;

குறும்பர்கள் பேசும் மொழி கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடையதென்றும், சிதைந்த கன்னடமே அம்மொழி என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் அம்மொழியைச் சிதைந்த தமிழ் என்று கூறுகிறார்.

கு.வ-11