பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12



மக்கள் வாழ்க்கையே மலையில்தான் தோன்றியது என்பது சில அறிஞர்களின் கொள்கை. மக்கள் நாகரிகம் மலையில்தான் தோன்றியதென்றும், அளவைக் கருவிகளும், இசைக்கருவிகளும், வில் முதலிய போர்க் கருவிகளும், மருத்துவம், கடவுளுண்மை, இசை, அரசு முதலிய கலைகளும் மலையிலேயே முதன்முதலில் கண்டறியப்பட்டன என்றும் தமிழ்த் தென்றல் திரு. வி. க. கூறுகிறார். மலைவாழ்வு, மக்களோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் மக்கள் கோவில்களை மலைகளின் மீது எழுப்பினர் என்றும் குறிப்பிடுகிறார்.

இத்தகைய பெருஞ் சிறப்புக்கள் வாய்ந்த மலைகள் பரந்தும், உயர்ந்தும், நீண்டும் தமிழகமெங்கணும் நிறைந்துள்ளன. அவற்றின் வளம், அவற்றில் இழிதரும் ஆறுகள், அவற்றில் புதைந்து கிடக்கும் கனிப்பொருள்கள், வாழும் மக்கள், அவர்கள் வாழ்க்கை, தொழில் வளம், அழகு, மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய எல்லாச் செய்திகளையும் இந்நூல் ஆராய்ந்து கூறுகிறது.