பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223

காட்டில் எரிந்துகொண்டிருக்கும் தீயின் மூலமாகவே, பளியர்கள் அவ்விடத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால் பளியர்கள் மிகவும் அஞ்சும் இயல்பினர். பிற இன மக்களைக் காண அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கண்டாலும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். சக்கிக்முக்கிக் கல்லின் உதவியினாலேயே இவர்கள் நெருப்பு உண்டாக்குகின்றனர். அதற்குத் துணைப் பொருளாகக் காட்டுமரங்களில் கிடைக்கும் பஞ்சு போன்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர். திருமணங்கள் எவ்விதச் சடங்குமின்றி நடைபெறுகின்றன. 'திருமணம் ஓர் இசைந்த ஏற்பாடு' (Marriage is an adjustment) என்று ஒரு மேலை நாட்டு அறிஞன் கூறிய கூற்று இவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமே, இவர்கள் வாழ்க்கையில் எவ்வித இடர்ப்பாடும் கிடையாது. கணவன் உணவுப் பொருளைத் தேடிக் கொணர வேண்டும். மனைவி அதைச் சமைத்துக் கொடுக்க வேண்டும். இவர்களுடைய வாழ்க்கைப் பொறுப்புக்கள் இவற்றோடு முடிவுறுகின்றன. அவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அப்பிணத்தை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு எல்லோரும் வேறு இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவ்விடத்திற்குச் சில திங்கள் வரையில் யாரும் செல்லமாட்டார்கள். திருவாளர் தர்ஸ்டன் என்ற ஒரு வெள்ளையர், திருநெல்வேலிக் காடுகளில் வாழும் பளியர்களின் வாழ்க்கையைப் பற்றி விரிவான குறிப்புகளைப் படங்களோடு ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலிப் பளியர்கள் இறந்தவனைப் புதைத்து, அப்புதைகுழியின்மேல் ஒரு கல்லை நாட்டிவிட்டுச் சென்று விடுவர். பிறகு அவ்விடத்தை அக்குடும்பத்தார் எப்போதும் காண விரும்புவதில்லை, மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் இவர்கள் வாழ்கின்றனர்,