பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

மரங்கள் அழிக்கப்பட்டன. அரசியலார் தலையிட்டு இவ்வழிவைத் தடுக்கச் சட்டங்களியற்றினர்.

சேர்வராயன் மலையைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நகரங்களிலும் வாழும் மக்களின் எரிபொருள் (fuel) தேவையை இம்மலையே நிறைவேற்ற வேண்டிவந்தது. இருப்புப்பாதை அமைக்கப்பட்டுப் புகைவண்டி ஓடத் தொடங்கியதும், அதற்கும் தேவையான எரிபொருளை வழங்கும் பணியைச் சேர்வராயன் மலையும் அதைச் சூழ்ந்த காடுகளுமே மேற்கொண்டன. சேலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர் பலர், காஃபி, இரப்பர் முதலியவற்றைப் பயிரிடுவதற்கான சோதனைகளைச் செய்ய அரசியலாரின் ஒப்பம் பெற்றுக் காடுகளை அழித்தனர். போதாக் குறைக்கு, மாபெரும் விட்டங்களுக்கான மரங்களை வெட்டிக் கள்ளக் கடத்தல் செய்வோரும் உண்டு. மரம்கடத்துவோரை ஒறுப்பதற்கான சட்டங்கள் அப்போது அமுலில் இல்லாத காரணத்தால் அவ்வழிவைத் தடுக்கவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மூங்கில் ஒன்றாேடொன்று உரசித்தீப் பற்றிக்கொண்டு, அதனால் காட்டிற்கு அழிவு நேர்வதும் உண்டு.

கி. பி. 1886-ஆம் ஆண்டு திடீரென்று அரசியலாருக்குக் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள காடுகளையெல்லாம் அளந்தனர். சேர்வராயன் மலைகள் மீதும், அவற்றைச் சூழ்ந்துள்ள அடிவாரங்களிலும் உள்ள காடுகளும் அளக்கப்பட்டுக் காவலுக்கு (Reserved forests) உட்படுத்தப்பட்டன. அவ்வாறு அளக்கப்பட்ட சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளவை. காட்டதிகாரி (Forest Officers) களும், காவலர் (Rangers) களும் அமர்த்தப் பட்டனர். காடு திட்டமான முறையில் பயன்படுத்த முடிவு செய்தனர்.