பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

283

குற்றாலத்தின் இயற்கைக் காட்சிகள், காண்போருக்கு இந்திய நாட்டின் மேற்குக் கரையான மலையாளக் கரையை நினைவூட்டுகின்றன. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும்பாதை, பரந்த பசுமையான நெல் வயல்களிடை (ஆண்டுக்கு 9 திங்கள்கள் பசுமையாகக் காட்சியளிக்கும்)யிலும், தென்னை , மா, பலா, கமுகு முதலியவை செழித்து வளர்ந்துள்ள சோலைகளிடையிலும் புகுந்து செல்லும் காட்சி உள்ளத்திற்குப் பேருவகை பயக்கும். மலையிலிருந்து இழிந்துவரும் அருவிகள் சித்திரா நதியை அடைவதற்கு முன் பல ஏரிகளில் தேக்கிவைக்கப்படுகின்றன. அவைகளிலிருந்து பல வாய்க்கால்கள் வலை பின்னினாற் போன்று ஓடி இச் சோலைகளை வளப்படுத்துகின்றன. தாவர இயல் வல்லுநர்களுக்கும், (Botonist) வேட்டை விரும்பிகளுக்கும் குற்றாலமலை பெரிதும் இன்பம் பயக்கும் இடமாக விளங்கு கிறது. கி. பி. 1835 ஆம் ஆண்டு, டாக்டர் வைட் என்பார் இம்மலையிற் போந்து, 20 சதுரமைல் பரப்பில் 1200 வகையான தாவரங்களைச் சேகரம் செய்தார். ஏறக்குறைய 2000 வகையான தாவரங்கள் இங்கு உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சாம்பர் என்னும் பெரிய மானினம் இங்கு அதிகமாகக் காணப்படுபடுகின்றது. மலையின் உயரமான பகுதிகளில் வரையாடுகள் நிறையக் காணப்படுகின்றன. புள்ளிமான் அருகிக் காணப்படுகின்றது. புலி சில சமயங்களில் தென்படுகிறது. காட்டுப் பன்றிகளை எந்நேரத்திலும் எவ்விடத்திலும் காணலாம். காட்டுக்கோழிகள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.