பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

வெள்ளோக்கு :

வெள்ளோக்கு (Silver Oak) என்பது சேர்வராயன் மலைகளில் நிறைய வளரும்படியான மரம். இதனுடைய பட்டை வெள்ளியைப்போல் பளபளப்பாக இருப்பதால் இம்மரம் இப்பெயர் பெற்றது. இது பருத்து நீண்டு 100 அடிக்கு மேல் வளரும். சேர்வராயன் மலையில் வாழும் மக்கள் வீடு கட்டுவதற்கும், வீட்டுச் சாமான்கள் செய்வதற்கும் இதையே பயன்படுத்துகின்றனர். இது மாம்பலகையைப்போன்ற தன்மையுடையது. இது வளையும் ; ஆனால் உறுதியானது. சேர்வராயன் மலைகளின்மீது எங்கு பார்த்தாலும் வானளாவி வளர்ந்து மஞ்சுரிஞ்சும் இம்மரங்கள் செம்மாந்து நிற்பதைக் காணலாம். சேர்வராயன் மலைகளில் வாழும் தோட்ட முதலாளிகள் இதை விரும்பி வளர்க்கின்றனர். ஏனென்றால் இதன் சிறப்புக்காக அல்ல; காஃபிப் பயிருக்கு எப்பேர்தும் நிழல் வேண்டும் என்ற காரணத்தால், காஃபித் தோட்டங்களிலேயே இதனையும் சேர்த்து வளர்க்கின்றனர்.

தீவனம் :

மலைமீது எப்பொழுதும் புல் நிறைய வளரும். மலைமீது வாழும் மக்கள், அது நன்றாக வளர்ந்திருக்கும் சமயத்தில் அறுத்துச் சேகரம் செய்து வைப்பர். கால்நடைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது, அச்சேமிப்புப் பயனுடையதாக இருக்கும். இதில் மற்றுமொரு பயன் இருக்கிறது. காய்ந்துபோன புற்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளுமல்லவா ? அதனால் அடிக்கடி காட்டுத் தீப்பரவும். ஆகையினால் இவற்றை அறுத்துவிடுவது காட்டுத் தீயைத் தடுக்கச் சிறந்த வழியாகும்.

தழை உரங்கள் :

காடுகளில் இருக்கும் பயனற்ற இலை தழைகள் வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.