பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

கீரனார், கூடலூர் கிழார் ஆகிய முப்பெரும் புலவரும் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

சேரநாடு குறிஞ்சிநாடு. குறிஞ்சி நாட்டில் வாழ்ந்த இளங்கோ ஆதலின், கொங்கு நாட்டை ஆளத் தனக்கு ஏற்ற இடமாகக் கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்து அங்குத் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்தான். ஆனது பற்றிக் கொல்லித் தலைவன் என்று சங்க நூல்களில் இவன் அழைக்கப்படுகிறான். பின்னாட்களில் சேர அரசிற்கு உரிமை பூண்டு ஒழுகியபோது, கடற்கரை நகரான தொண்டியைத் தன் தலைநகராகக் கொண்டான். ‘கொல்லிப் பொருந’ (பதிற். 73), ‘சேரலற்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகநா. 209), ‘கொல்லியாண்ட குடவர் கோவே’ (சிலப். 24) என்ற அடிகள் கொல்லிமலை சேரர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது என்பதை விளக்கும்.


ஓரி :

கொல்லிமலைக்குப் பெருங்கிழமை கொண்டவன் ஓரி. இவன் கடைஏழு வள்ளல்களில் ஒருவன். வில்லாற்றலில் சிறந்தவனான இவனை, அச்சிறப்பு நோக்கி ‘வல்வில் ஓரி’ என்று சங்க இலக்கியம் கூறும். இவன் வில்லாற்றலைச் சிறப்பிக்கப் புகுந்த வன்பரணர், ‘யானையைக் கொன்று வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியின் உயிர்குடித்து, துளைபொருந்திய கோட்டினைத் தலையிலே உடைய புள்ளிமான் கலையினை உருட்டி, உரல் போலும் தலையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து, அதற்கருகிலிருந்த ஆழ்தலையுடைய புற்றின் கட்கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும் வல்வில்’ என்று கூறுகிறார்.

மேலும் கொல்லியின் வளத்தையும் ஓரியின் ஈகையையும் பற்றி அவர் கூறும்போது,



கு.வ.—5