பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


பொறையோடு இணைந்து பெருந்துறையை முற்றுகையிட்டான். நன்னன் கடும் போர் ஆற்றினான. நார்முடியின் வாட் புண் பெற்று உயிரிழந்தான். கடம்பின் பெரு வாயில் திறந்து விட்டது. வாகை வெட்டி வீழ்த்தப்பட்டது. வாகைப் பெருந்துறை சேரர் கைப்பட்டது.150

பெண் கொலை புரிந்து பழியுடையவனாக துாற்றப் பட்ட நன்னன் பரிசிலரைப் புரக்கும் பேரன்புடையவனாகவும், களிறு பல வழங்கும் கொடை வள்ளலாகவும் விளங்கினான்.151 அவன் பேராண்மயும், பெருங்கொடையும் கண்டு அவன் பால் பேரன்பு கொண்ட மக்கள் அவன் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடினர். 152

59. நாஞ்சிற் பொருநன்

பொதியின் மலைத் தொடர்களுள் ஒன்றாக அமைந்தது, நாஞ்சில்மலை அம் மலையைச் சூழ இருந்த நாடும் நாஞ்சில் எனும் பெயரே கொண்டது. நல்ல வளஞ்செறிந்த நாஞ்சில் நாட்டை ஆண்டிருந்த வில்வீரன் நாஞ்சிற் பொருநன் 153 அவன் நாஞ்சில் வள்ளுவன் எனவும் அழைக்கப்பட்டான். நாஞ்சிற் பொருநன், பாண்டியர் படைத் தலைவனாய்ப் பணியாற்றும் பெருமையுடையோனாவன். அப் பாண்டியன் பொருட்டுத் தன் உயிரையும் இழக்கத் துணிவன்.154 போரில் புறங்காட்டா உயர்வுடையோர் வழி வந்த நாஞ்சிற் பொருநன், பகைவர்க்கு அணுகற்கு அரியனாகவும். நட்புடையார்க்கு உற்றுழி உதவும் உரவோனாகவும் விளங்கினான். வரையாது வழங்கிய வள்ளலாக வாழ்ந்தான்.155