பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. பிற மரபினர்

சங்க காலத் தமிழகத்தில், முடியுடை மூவேந்தராய் பெரும் புகழ் கொண்டு பேரரசாண்ட சேர சோழ பாண்டிய மரபினரேயன்றி, குறுநில மன்னர்களாக, படைத்தலைவர்களாக, கொடை வள்ளல்களாக புகழ்பட விளங்கிய, வேறுசில மரபினரும் வாழ்ந்திருந்தனர் என்பதை சங்கத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிகிறோம். இம் மரபினரும், சங்க காலத் தமிழகத்தின் வரலாற்றோடு ஒன்றிப் போனவர்கள். இம் மரபினரில் சிலர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள்; சிலர் வேற்று நிலத்திலிருந்து வந்தவர்கள்; தமிழ் இனத்தோடு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர்கள்; சங்ககாலத் தமிழகத்தின் அரசியல் நிலைக்கு, இம் மரபினர்தம் வாழ்வும் பெரிதும் காரணமாதலின், அம்மரபினர் குறித்து சங்கத் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் வரலாற்றுக் குறிப்புக்களை தொகுத்துரைத்தலும், சங்க காலத் தமிழகத்தின் வரலாற்றினை அறிய பெருந்துணை புரிவதாகும் என்பது உறுதி.

1. கொங்கர்

சேரநாட்டின் கிழக்கெல்லை, சோழ நாட்டின் மேற்கெல்லை, பாண்டிய நாட்டின் வடமேற்கெல்லை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழ்