முன்னுரை[1]
உலகமும் உயிரும்:
நாம் வாழும் உலகத்தின் வரலாறு வரையறுக்கப்பட்ட ஒன்று அன்று. உலகம் தோன்றி எத்தனையோ ஆண்டுகள் கழிந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் இது வாழும் என்பதை ஓரளவு அறிஞர் ஆராய்ந்து கண்டாலும் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. இந்த நெடுங்கால வாழ்வில் நிற்கும் உலகில் நிலம் தோன்றிய பின் அதில் மனிதன் பிறந்தபின் நெடுங்காலம் கழிந்திருக்க வேண்டும். தோன்றிய மனிதன், தோன்றிய அந்த நாளிலேயே எல்லா அறிவையும் பெற்றிருந்தான் என்று கூற இயலாது. நாளாக ஆக அவன் அறிவும் வளர்ச்சி அடைந்தது. மனிதனுக்கு மற்றவற்றைக் காட்டிலும் நல்ல தன் நலனும் தீயதன் தீமையும் ஆராய்ந்து அறிகின்ற பகுத்தறிவு உண்டு. ஆயினும், அவன் தோன்றிய நெடு நாளைக்குப் பிறகே அந்த அறிவு கைவரப்பெற்ற மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள உயிர் வாழ்வனவற்றையும் அல்லாதவற்றையும், பரந்த உலக நிலையையும் எண்ணலானான். அவன் எண்ண எண்ண அவன் நினைவில் கடந்தகால நிகழ்ச்சிகள் உருப்பெற்றன. “நம் கடந்தகால வாழ்வில்–இளமையில்–வாலிபத்தில் எவ்வெவ்வாறு வாழ்ந்தோம்?” என நினைந்தான். அதைப் போன்றே பிற உயிர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் எண்ணினான். அந்த
- ↑ இரண்டாம் பதிப்பு-1962.