சங்க காலத் தமிழகம்
123
தனியாய் வாழ்ந்து வந்தான்; மதுரை அக்காலத்தில் வளம் பெறவில்லை. எனவே, கடைச்சங்கம் செங்குட்டுவனுக்கு முன்னரே இருந்தது என்றும், அக்காலத்தில் தமிழ்நாடு சிறந்திருந்ததென்றும் கொள்ளல் பொருந்தும். சங்க காலப் புலவர் பலர் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்திருந்ததும், அவருள் சிறந்த பரணர் அவனைப் பாடியிருப்பதும் உண்மையே யாயினும், சங்கம் கலைக்கப் பெற்ற பின் அவர்கள் பல இடங்களில் பரவிச் சென்று வாழ்ந்தார்கள் என்று கொள்ளல் பொருந்தும். எனவே கடைச் சங்க காலம், கயவாகுவின் காலத்துக்கு முற்பட்டதாகிய கி.பி. முதல் நூற்றாண்டும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்று கொள்ளல் தகும்.
கடைச்சங்க காலத் தமிழ் மக்கள் :
இனி, அந்தக் காலத்தில் தமிழ் நாடு இருந்த நிலையை நோக்குவோம். தமிழ் நாட்டில் மூவேந்தரும் பல குறுநில மன்னர்களும் வாழ்ந்திருந்தார்கள். தமிழ் நாட்டு இலக்கியங்கள் பல அக்காலத்தில் தோன்றின. அக்கால வரலாற்றையும் அரசியல் நெறியையும் மக்கள் வாழ்க்கை முறையையும் அந்த இலக்கியங்களே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. திருவாளர்கள் கனகசபைப் பிள்ளை,[1] P. T. சீனிவாச ஐயங்கார்,[2] M. சீனிவாச ஐயங்கார்,[3] நீலகண்ட சாஸ்திரியார்[4] போன்ற பெரியவர்கள் இவற்றை அடிப்படையாக வைத்தே அன்றைய வரலாற்றை எழுதியுள்ளார்கள். இன்று இன்னும் பலர் சங்ககால வரலாற்றையும் வாழ்க்கை வளத்தையும் பலப் பல வகையில் பலப்பல கோணங்களில் ஆராய்ந்து எழுது-