எது வரலாறு?
25
வரை உயர்த்த வேண்டின் சிலர் காலத்தால் அவரை முன்னே வாழ்ந்தவராகக் காட்ட முயல்வர். வேறு சிலர் காலத்தால் மிகப் பிற்பட்டவராகக் காட்டுவதும் உண்டு. தமிழ் நாட்டு வரலாற்றிலே இக் காலவேற்றுமையை அதிகமாகக் காண முடிகின்றது. எனினும், பலரது முடிந்த முடிவுகள் துணைக்கொண்டு தமிழ் நாட்டு வரலாற்றை நாம் ஆராய்வோமாயின், உண்மை விளங்காமல் போகாது.
சுதந்திரம் பெற்ற பின் இந்திய வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்ற உணர்வில் அரசியலார் உள்ளிட்ட பலர் முயல்கின்றனர். காரணம் என்ன? அயலவர் ஆட்சிக் காலத்து அவர்கள் ஆட்சியை உயர்த்துவதற்காகவே பல உண்மைகளை மறைத்து வரலாற்றை எழுதி வைத்தார்கள். அந்தக் கொடுமைகள் போகவும் உண்மை வரலாறு என்றும் உலவவும் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என இந்திய அரசாங்கத்தாரும் பிறரும் விரும்புகின்றனர். தமிழ் நாட்டுப் பழைய வரலாற்றிலே இத்தகைய சிக்கல்கள் இல்லையாயினும், சிலர் தம் கருத்துக்கு ஏற்ப வரலாற்றை மாற்ற விரும்புவதால், சிக்கல்கள் உண்டாகின்றன. நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியரைக் கிறித்துவுக்குப் பின் கொண்டு வருவதும், நாம் விரும்பா உண்மைச் சித்திரங்களையும் வாழ்வின் போக்குகளையும் வரலாற்று நிகழ்ச்சி காட்டிக் கொடுக்கிறது என்ற காரணத்தால் அந்த வரலாற்றினையே இல்லை என்பதும் போன்று, பல வரலாற்று மாற்றுக் கருத்துக்களைப் பரப்பச் சிலர் முற்படுகின்றனர். இதுபோன்றே சங்க காலத்தை எட்டு ஒன்பதாம் நூற்றாண்டிற்குத் தள்ளுவதும், வள்ளுவரைப்