பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61



தொல்காப்பிய முதலிய இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் அக்காலத்தே நிலவிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை வழக்குகளையும் முதலாகக் கொண்டு எழுந்தவை. “தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின்"என்றே தொல்காப்பியத்துக்குப்பாயிரம் வழங்கிய பனம்பாரனார் குறிக்கின்றார். இவ்விருவகை வழக்குகளில் நிலவிய சமயக் கொள்கைகளைக் காண்பதே நமது முன்னிற்கும் பணியாகிறது.

சமயவாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படை கடவுட் கொள்கையாகும். கடவுள் ஒருவர் உண்டு என்ற உணர்வும், அவரை வாழ்த்தி வழிபட்டு இயலுவது சமய வாழ்வு என்ற கருத்தும் சமயத்தின் உட்கிடை. இவற்றை மேற்கொண்டு ஒழுகுவது சமய வாழ்வாகும் என்பது நாடறிந்த கொள்கை. சமயத்தின் தோற்றம் மிகமிகத் தொன்மையான மக்கள் இயற்கையில் கண்ட பெரு நிகழ்ச்சிகளால் உள்ளத்தே கொண்ட அச்சமும் அவலமும் காரணமாகக் கொண்டது என்பர் வரலாற்றறிஞர். அச்சத்திற் கருவுற்றெழுந்த சமயம், இயற்கையின் கூறுகளான நிலம், நீர், தீ, காற்று, வான் என்ற ஐந்துக்கும் அப்பாலாய் அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டி வைக்கும் முதற் பொருள் ஒன்று உண்டு என உணர்ந்து அதற்கும் உலக வாழ்க்கைக்கும் தொடர்பு அமைத்து, அதனை உணர்ந்து இனிது ஒழுகச் செய்யும் முறையில் நல்ல தொண்டாற்றியிருக்கிறது. அந்த முதற் பொருளைப் பழந்தமிழர் கடவுள் என்றும், இயவுள் என்று வரும் இரண்டு சொற்களால் குறித்துள்ளனர். “கடவுள் வாழ்த்து” “பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்' என்ற தொடர் மொழிகள் யாவரும் நன்கு