பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

முதற் பொருளாக நிலவுகிறது. எல்லா நிலப் பகுதிகட்கும் நீர் தீ வளி விசும்பு ஆகிய அனைத்திற்கும் மேலாய் எல்லாம் தன் ஆணை வழி நிற்கப் பண்ணுவதுபற்றிக் கடவுட் பொருட்கெனத் தனியே நிலம் கிடையாது; எல்லா நிலங்களிலும் இக்கடவுட் குறிப்புப் பொதுவாகக் காணப்படுவதொன்றே இதற்குப்போதிய சான்று.

குறிஞ்சி நிலத்து முருகன் முதலாய தெய்வவகை எல்லாவற்றிற்கும் தோற்றம் நிலை வேறு கூறப்படுவது போலக் கடவுளாகிய முதற் பொருளுக்குத் தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. இப்பொருளைக் குறிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியங்கள் பிறை முடியும், முக்கண்ணும், கறைமிடறும் உடையனாகக் குறிக்கின்றன. இதனால் இன்று சிவம் என்ற சொல்லால் குறிக்கப்படும் பொருள் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது கொண்டு, சிவ பரம்பொருளே பழந்தமிழர் சமயத்துறையில் நிலவிய கடவுள் என்பது தெளிவாகத் தோன்றுகிறது. தெய்வங்கட்குத் தோற்றமும் கடவுட்கு அது கூறப்படாமையும் நோக்கின், பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது கடவுள் என்றும், பிறந்து நிலைவேறு கொண்டு இயலுவன தெய்வங்கள் என்றும் பழந்தமிழர் கருதிய கொள்கைகளாகின்றன.

மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறு பிறப்பும் வீடு பேரின்பமும் நிரயத் துன்பமும் சொல்வழக்கில் நிலவுகின்றன. மக்களுடைய மனம் மொழி உடம்பு மூன்றின் அசைவு அசைவின்மைகளால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது