பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வம்,

‘உரை சால் சிறப்பின் அரசு விழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞாலமுழுவதும் வரினும்
வழங்கத் தவா அவளத்த தாகி
அரும் பொருள் தரூஉம் விருந்திற்றே எம்
ஒருங்கு தொக் கன்ன உடைப்பெரும் பண்டம்,
கலத்தினுங் காலினுந் தருவனரீட்டக்
குலத்திற்குன்றாக் கொழுங் கொடிச் செல்வர்.’

வணிகர் ஈட்டிய செல்வத்திலிருந்து தான் நாட்டில் அறனும் இன்பமும் நிலைக்கின்றன. நாட்டில் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப்பட்ட வாழ்க்கைக்கும், வணிகர் முயற்சியே அடிப்படையானது. ஆகவே அவர்கள் மக்களுள் தலைமை பெற்றனர்.

கண்ணகி, பிறந்த நகரை விட்டு கணவனோடு மதுரை செல்லும் வழியில் மருத நிலவாழ்க்கை வருணிக்கப் படுகிறது. பாலை நிலத்தில் எயினர் குடியில் கண்ணகி தங்கி அவர்களது தெய்வ வழிபாட்டைக் கண்டு சொல்லுகிறாள். மதுரையையடுத்த ஆயர் சேரியில் மாதரி கண்ணகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள். இவ்வாறு பலவகைப்பட்ட மக்களது வாழ்க்கையோடும், கண்ணகியின் வாழ்க்கைத் தொடர்பு படுத்தப்படுகிறது. அவர்களது வாழ்க்கையும், கலையும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. கடைசியில் மதுரையில் உண்மையை நிலைநாட்ட வேண்டி வழக்குரைத்து, சிலம்பை உடைத்துத் தன் கூற்றை நிரூபிக்கிறாள். நாடு தாண்டி நாடு வந்து வாணிபம் செய்யும் உரிமையை மறுத்த பாண்டியனது தலைநகரைத் தீக்கிரையாக்குகிறாள். அப்பொழுது அந்தகர மக்கள் நகரத்தைத் தீக்கிரையாக்குவது கொடுமை என்று கூறவில்லை. இது அறச் செயல் என்றே கூறுகிறார்கள்.

‘வரு விருந் தோம்பி
மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர்
பெரு மகிழ் வெய்தி


94