பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயன்மார்கள், சிவனடியார்கள் என்ற சாதியைச் சார்ந்தவராயினும் அவரடிக்கு ஏவல் பூண்டு ஒழுக விழைந்தார்கள்.

‘ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்கள் பாராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகளாரே’

ஆனால் சிவனடியார் என்ற சமய முத்திரை அவருக்கு இருத்தல் வேண்டும். இதுபோன்ற கருத்துடைய பிள்ளைப் பெருமாளையங்கார் பாடல் ஒன்றுள்ளது. அரவணைக் கிடந்தானுடைப் அன்பருக்குத் தாம் அடிமையெனக் கவிஞர் தம்மை யழைத்துக் கொள்கிறார். இவை யிரண்டிலும் சமயத்தில் சாதி மறைவதைக் காண்கிறோம். ஆனால் சமயப் பிரிவினை வலுப்படுத்துவதையும் காண்கிறோம்.

இராமலிங்கரின் மேற்கண்ட பாடலைப் பார்த்தால் மனித நேயத்தை அவர் போற்றுகிறார் என்பது புலனாகும். எவ்வித பேதமும் பாராட்டாமல் உயிர்களைத் தம்முயிர் போல் நேசித்து தம்மோடு சமமான உரிமையளித்து மகிழ்ச்சியடைபவர்களது உள்ளமே நடராஜன் நிருத்தமாகும், அரங்கம் என்று அடிகளார் கூறுகிறார். மேலும் அவர்களை ‘வித்தகர்’ சிறந்தவர் என்று போற்றுகிறார். அவர்கள் அடிபணிந்து அவர்கள் வழியில் தாமும் செல்ல விழைவதாகக் கூறுகிறார். இப்பாட்டில் அவ்வித்தகருக்கு சமய முத்திரை இல்லை. அவர் கடவுள் வழிபாட்டுக் கொள்கையுடையவராக இருத்தல் அவசியமில்லை. மனிதர் எல்லோரையும், செல்வம் பற்றியோ, உயர்வு தாழ்வு பாராட்டாமல் நேசிப்பவர்கள் எல்லோருக்கும் சம உரிமைகள் அளிக்க உடன்படுவார்கள். இத்தகைய மனித உறவில் பெருமகிழ்ச்சி யடைவார்கள். அவர்கள் உள்ளத்தில் அறிவுருவமாய் நடராஜப் பெருமான் நடனம் புரிகிறான் எனப் பாடுகிறார். அடிகளாரது மனித நேயத்தின் உச்ச நிலையை இப்பாடல் காட்டுகிறது.

இவ்வாறு மனித நேய முடையவர்கள் பிறருக்கு இடர் நேர்ந்த போது, அவர்களுடைய உணர்வோடு ஒன்றி எவ்வாறு அவற்றை உணர்வார்கள் என்பதைத் தம்மையே உதாரணமாகக் கொண்டு இராமலிங்கர் சில பாடல்களில் கூறுகிறார்.

100