பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூலுத்தேவர்கதை

வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795ல் பூலுத்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான், கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.

சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலுத்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை. அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளைக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்புகொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலுத்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.

அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.

136