பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பொங்கல் விழா

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்நாளில் கதிரவனைத் தமிழ் மக்கள் வணங்குவதாக ‘கல்கி’ கூறுகிறது. ஏனெனில் கதிரவனே பூமியின் செழிப்புக்குக் காரணம் என்று கல்கி கருதுகிறது கல்கியின் கருத்து தற்கால விஞ்ஞானக் கருத்துக்கு ஒருவாறு ஒத்திருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கோ, வழக்கத்துக்கோ, மரபுக்கோ அது பொருந்துவதாக இல்லை. பொங்கல் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று பொங்கல் விழாக் கொண்டாடப் படும் முறையில் வரலாற்று எச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பொங்கல் விழாவின் உண்மையான தன்மை பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும்.

பொங்கல் விழாவிற்கும் பாவை நோன்பிற்கும் தொடர்பு உண்டு. பாவை நோன்பு மார்கழி மாதம் தொடங்கி தை மாதப் பிறப்பன்று முடிவது. ஏழாம் நூற்றாண்டில் பாவை நோன்பு கொண்டாடப்பட்ட விதத்தைக் குறித்து ‘திருப்பாவை’யினின்று நாம் அறியலாம்.


வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள்,
கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிப்பாடி




10