பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


புராதன ஆரியரும்
திராவிடரும்
(டாக்டர் ஆனந்த குமாரசுவாமி

1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 1947ம் ஆண்டில் உயிர் நீத்தார். அவர் எழுதிய நூல்களுள், இந்திய இந்தோனேசியக் கலைகளின் வரலாறு தலைசிறந்தது. அதைப் போன்றதோர் சிறந்த நூல் வரலாற்றுத் துறையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இந்நூலில் ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். அவரது கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். -நா.வா.)

கிறிஸ்து சகாப்தத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதிலும் சிறு சிறு குடியினராகப் பரவியிருந்தனர். இவர்கள் மேற்கிலிருந்து வந்தனர் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் புதிய கற்காலம் தொட்டு இந்நாட்டிலேயே பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்கள் திராவிடர் என்பதே ஆனந்தரின் கருத்து. ஆரியர்கள் ‘தாஸ்யூக்கள்’ அல்லது ‘தாஸர்’ என்ற வகுப்பாரோடு ஓயாமல் போராடி வந்தார்களென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்களது நகரங்கள் ஆரியர்களால் புரங்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆரிய இனத்தவர் அல்ல என்பது ‘அனாஸர்’ (மூக்கற்றவர்கள்) என்று ஆரியர் அவர்களுக்கு இட்ட பெயரிலிருந்து தெரிகிறது.

28