பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழுணர்வு ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்று தனிநாயக அடிகள் சொல்லுகிறார்.

ஆங்கில ஆட்சி ஓர் ஸ்துலமான உண்மை. அதனை எதிர்த்து எழுந்த தேசிய உணர்வு மறைத்தற்கரிய உண்மை.

அதனோடு மறுமலர்ச்சியுற்றது மொழியுணர்ச்சி. இது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி வழிப் பிரிவுகளுக்கும் பொருந்தும். இவை இரண்டிற்கும் முரண்பாடு எதுவுமில்லை. பாரதியே இவ்விரண்டு உணர்ச்சிகளின் ஒற்றுமைக்குத் தமிழ் நாட்டில் இலக்கிய வழிகாட்டி.

திராவிடஸ்தான், அடிகள் கூறுவதுபோல ஒரு கருத்துத்தான் (Concept) அது ஸ்தூலமான உண்மையல்ல. அதன் அடிப்படை ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பல்ல. நாட்டின் விடுதலைப் பற்றுமல்ல. தமிழுணர்ச்சி அக்கருத்தை வலிவுபடுத்துவதாகாது. ஏனெனில் கற்பனைத் திராவிடத்திற்கு எந்த மொழியும் அடிப்படையாகாது. அதுவும் தமிழ்வெறி, தெலுங்கையும், கன்னடத்தையும், மலையாளத்தையும் எவ்வாறு உறவாக்க உதவும்? இது தான் தீர்க்க முடியாத முரண்பாடு. பிரிவினை இயக்கத்தாரின் தமிழுணர்வு தமிழ் மரபின் வழிவந்ததல்ல.

ஏனெனில் தமிழனது பண்பாடு எல்லோருடனும் உறவுகொண்டு வளர்ந்தது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்)’ என்று பாடியவன் சங்ககாலத் தமிழ்ப் புலவன்.

பல மொழிகள் பேசும் மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்ந்தவன் தமிழன். கிரேக்கர், ஆரியர், துருக்கர், தெலிங்கர், கன்னடர், மராட்டியர், மலையாளி முதலிய பல இனத்தவரின் பண்பாடுகளின் இணைப்பைத் தமிழ்ப் பண்பாடு பெற்றுள்ளது. நமது பண்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நாடு முழுவதும் பரவியுள்ளன.

காஷ்மீரத்தில் சைவத்தைப் பரப்ப திருநெல்வேலி சிவாச்சாரியார்கள் சென்றிருக்கின்றனர்.

59