பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்காலத்தார் சித்தர்களாக்கிவிட்டனர். உண்மையான சித்தர்கள் தந்திரத்தில் நம்பிக்கையுடையவர்கள். தந்திரம் தொன்மையான மந்திரவாதம் அதன் அடிப்படை சக்தி. இச்சக்தி பெண்மைதான்.அவர்கள் பெண் பிறப்புறுப்பை(அல்குல்) இரண்டு விதமான அடையாளங்களில் ஒப்பிடுவர். ஒன்று தாமரை, மற்றொன்று முக்கோணம். பெண்மையின் ஆற்றலை அடைந்தால் பிரபஞ்சத்தை அடக்கி ஆளலாம் என்பது அவர்கள் தத்துவம். இதற்காகப் பெண்மை ஆற்றலையடைய அவர்கள் யோக முறைகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு ஒரு புராதன விஞ்ஞான விளக்கமும் கொடுக்கிறார்கள். முதுகுத் தண்டிலுள்ள சுழுமுனை என்னும் நரம்பில் சட்சக்கர பேதம் என்று படிப்படியாக உயரும் நிலையில் 7 தாமரைகள் இருப்பதாகவும் யோகத்தின் மூலம் மனம் ஒவ்வோரு படியாக ஏறிக் கடைசியில் சகல சக்திகளையும் அடையும் என்பதும் அவர்கள் தத்துவம். இவையனைத்தும் பெண்மையின் சக்தியைப் பெறும் முயற்சியே. ஆண்கள் பெண்களின் சக்தியை ஏன் பெற வேண்டும்? பெண்கள் உயர்வானவர்கள் என்று மதிக்கப்பட்ட காலத்தில்தான் அத்தகைய எண்ணம் தோன்ற முடியும். பெண்ணாதிக்கத்திற்கு அடிப்படையான சமுதாய அமைப்பு பின்னரும், சக்தி வழிபாட்டிலும், தந்திர முறைகளிலும் சித்தர் தத்துவங்களிலும், எச்சங்களாகக் காணப்படுகின்றன. இவையனைத் தையும் 'வாமாசாரம்' என்ற சொல்லால் இந்தியத் தத்துவ நூலார் அழைக்கிறார்கள், வாமம் என்றால் பெண், ஆசாரம் என்றால் ஒழுக்கம். பெண்ணொழுக்கத்தைக் கடைப்பிடித்து பெண்மையின் சக்தியைப் பெறுவதே இம்முறைகளின் நோக்கம். இம்முறைகளின் மூலவேர் பெண்ணாதிக்கச் சமுதாயத்திலிருந்தது என்பதில் ஐயமில்லை.

இனி இன்று நிலவி வரும் அம்மன் வணக்கத்திலிருந்து சில சான்றுகள் காணலாம். ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறதல்லவா? ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி பூசனையில்லை. தந்திரீக முறைகள் சிலவும் தொன்முறை

76