பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழர் வரலாறு ஆலங்கானம், ஆலமுற்றம் இருப்பை, காஞ்சி, வஞ்சி, வாகை போல்வன மரத்தால் பெயர் பெற்றவை; கரந்தை, காஞ்சி, தூசி, வஞ்சி, வாகை என்பனவற்றைப் புறத்திணை வகைகளால் பெயர் பெற்றனவாகவும் கொள்ளலாம். சமஸ்கிருதம் அல்லது, அது சார்ந்த மொழி வழங்கும் வட நாட்டில், ஊர்ப் பெயர்கள் "புரி" அல்லது "புரம்" என்பதை ஈற்றில் கொண்டனவாய், அயோத்தியாபுரி துவராகாபுரி, மதுராபுரி, அஸ்தினாபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டதை ஒட்டி இச்சமஸ்கிருத மொழியாளர்கள், தமிழகத்தில் வேர் ஊன்றிய காலத்திற்குப் பின்னர்ப் "புரம்" என்பதை ஈற்றில் கொண்டுவிட்ட, இராமனாதபுரம், காஞ்சிபுரம், சோழ லிங்காபுரம், திருவத்திபுரம், திருவனந்தபுரம், வாணாபுரம், விரிஞ்சீபுரம், விழுப்புரம் போலும் சில ஊர்ப் பெயர்கள் தமிழகத்திலும் இடம்பெற்று விட்டாலும், பண்டைத் தமிழகத்தில், எந்த ஒரு ஊர்ப் பெயரும் "புரம்" என்ற ஈற்றினைக் கொண்டதாக அமையவில்லை. அதுமட்டுமன்று, பழந்தமிழ்ப் புலவர்கள், "புரம்" என்ற ஈற்றுச் சொல் வடிவை அறவே வெறுப்பதும் செய்து வந்துள்ளனர். வடநாட்டுத் துவரகாபுரியைக் குறிப்பிட நேர்ந்த ஒரிடத்திலும், "புரி" என்ற அதன் ஈற்றையும், அதை, முதல் நிலையோடு இணைக்கும். இடைப்பகுதியையும் அறவே விடுத்து, "துவரை" என அழைப்பதிலேயே ஆர்வம் காட்டியுள்ளனர். "துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழி முறை வந்த வேளிர்" (புறம் : 201) என்ற கபிலர் கூற்றினைக் காண்க. அதுபோலவே, கங்கைக்கரைப் பாடலிபுத்திரத்தைக் குறிப்பிட நேர்ந்த இரு இடங்களிலும் "புத்திரம்" என்ற அதன் ஈற்றுப் பகுதியைக் கழித்துவிட்டுப் "பாடலி" என்றே குறிப்பிட்டுள்ளனர். "பொன்மலி பாடலி" (குறுந் : 75) "நந்தர் சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கைநீர் முதல் கரந்த நிதியம்" (அகம் : 262) என்ற தொடர்களைக் காண்க. இவ்வாறு, வட இந்திய ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடும் போதும், சமஸ்கிருத மொழியாளர்கள், அப்பெயர்களோடு இணைத்து வழங்கும் "புரம், புத்திரம்" என்பனவற்றை