பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் - தென் இந்தியாவும் சுமேரியாவும் : நெய்தல் அல்லது கடல் சார்ந்த நிலத்தில், வாணிகம், தேவையை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப் பெற்றது என்பது, முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டது. தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலுக்கு அணித்தாக உளது. அக்கடற்கரை மாவட்டங்களில், குடிவாழ்வார், தொடக்க காலத்திலிருந்தே பரதவர், அல்லது கடலோடிகள் என அழைக்கப்பட்டனர். தென்னிந்தியக் கடற்கரையினரான பரதவர், பருவக்காற்றின் காலந்தவறாமையினைத் தொடக்கத்திலேயே கண்டு பிடித்திருப்பர். உண்மையில், பருவக்காற்றுக் காலந்தவறா இயற்கையின் இயல்பையும், அதிலிருந்து கடல் மேற்செலவு இயல்பாகிவிடும் உண்மையையும் புரிந்து கொள்ளாமல், மலையாள நாட்டில், ஓராண்டு காலம் வாழ்வதுகூட உண்மையில் இயலாது. பருவக் காற்றின் அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளாத போதும், மாலுமிகள், கரையோரமாகவே, ஆப்கனிஸ்தான் பர்ஷியக் கடற்கரை வரையும் செல்லக்கூடும். அண்மையில் உருவான ஒரு வரலாற்றுத் தத்துவப்படி, மெஸ்படோமியப் பள்ளத்தாக்கில், பழைய சுமேரிய நாகரிகத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படும், அப்பள்ளத்தாக்கின் தமிழர் குடியேற்றத்திற்கு நனி மிகப் பழைய காலத்தில், கடல்வழி, நில வழிகளில் நடைபெற்ற விரிவான பயணம் மட்டுமே வழி செய்திருக்க முடியும். திருவாளர் எச். ஆர். ஹால் என்ற வரலாற்றுப் பேராசிரியர் "சுமேரியர்களின் மொழி, செப்டிக், ஆரியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து வேறுபடுவது