பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 - தமிழர் வரலாறு மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரோடு மிடைந்து செறியத்தொடுத்த தேம்பாய் கண்ணி, ஒலியில் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் தெண்கணை கறங்கக் காண்தக நாடுகெழுதிருவின் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார், கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒரு தானாகிப் பொருது களத்து அடலே" - புறம் : 76. அடுத்த பாட்டு இவ்வாறு கூறுகிறது : "காலில், குழந்தைப்பருவத்தில் அணிந்த சதங்கையைக் கழற்றி அகற்றி விட்டு, வீரர் அணியும் கழல் அணிந்துகொண்டு பிள்ளைப் பருவம் கழிந்ததை உணர்த்த, பிறந்த மயிர் நீக்கப்பெற்ற தலையில், வேம்பின் தளிரோடு, நெடிய உழிஞைக்கொடி கலந்து கட்டிய தலைமாலையைச் சூட்டிக்கொண்டு, சிறு பிள்ளைகள் அணியும் வளை கழற்றப்பட்ட கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, நெடிய தேர் மீது பொலிவு தோன்ற நிற்கின்றான்; மாலை அணிந்திருக்கும் மார்பிலிருந்து, பிள்ளைப்பருவத்தே அணியும் ஐம்படைத்தாலி அணியை இன்னமும் அகற்றினானல்லன்; பால் உணவு விடுத்துச் சோற்றுணவை இன்றுதான் உண்டான். தன்மேல் சினங்கொண்டு சாரி சாரியாக வரும் புதிய வீரர்களைத் தன்னினும் எளியராக எண்ணி இகழ்வதும் செய்திலன். வந்து மோதினாரைக் கைக்கொண்டு வானோக்கி ஒச்சி எறிய, அவர்தம் உயிரிழிந்த உடலம் நிலத்தின் கண்ணே வீழ்ந்து உயிர் போகக் கண்டும், கொண்ட வெற்றியைக் கண்டு மகிழ்வதோ, மனச்செருக்கு உறுவதோ செய்திலன். இத்தகு நலம் வாய்ந்த இவ்விளையோன் யாவனோ? யாவனே ஆயினும் வாழ்க அவன் கண்ணி".