பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

147

நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதே தம் கொள்கையாம் என்பதை உறுதி செய்துள்ளார் திருவாளர் அய்யங்கார் அவர்கள்.

திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்காருக்கு முற்பட்டவரும், அவருடைய 'தமிழர் வரலாறு' (Histry of Tamils) என்ற நூலுக்கு முற்பட்டதான 'தமிழ் ஆராய்ச்சி' (Tamil Studies) ன்ற நூலின் ஆசிரியரும் ஆகிய, திருவாளர் எம். சீனிவாச அய்யங்கார் அவர்கள், தொல்காப்பியர், கி.மு. 350க்கு முற்பட்ட காலத்தவராவர் எனக் கூறி, அதை உறுதி செய்யும் இரண்டு வலுவான சான்றுகளைக் கொடுத்துள்ளார்.

"தொல்காப்பியப் பாயிரம், தொல்காப்பியர் இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்ற இலக்கண நூலை அறிந்தவர்: அதை முதல் நூலாகக்கொண்டு தம் தொல்காப்பியத்தை இயற்றியவர் எனக் கூறுகிறது. 'ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்' என்பது பாயிரம். சமஸ்கிருத இலக்கணத்திற்கு முழு முதல் நூலாகக் கருதப்படுவதும், ஊழிக்கால அளவை உறுதி செய்யத் துணை புரிவதுமாகிய பாணினியின் இலக்கண நூல் இருக்கும்போது, தொல்காப்பியர், அதைப் பயின்று, தாம் இயற்றிய தமிழ் இலக்கணத்திற்கு, அதை முதல் நூலாகக் கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்குத், தொல்காப்பியர் காலத்துத் தென்னாட்டு இந்துக்களுக்குப் பாணினி, அறிமுகம் ஆகாதிருந்திருக்க வேண்டுமென்பது உண்மை யானாலல்லது, விடை காண்பது இயலாது. தம்முடைய இலக்கண நூலில், பாணினி குறிப்பிடும் முன்னோர்கள் அறுபத்து நால்வரில், இந்திரனும் ஒருவர். ஆகவே, அவ்விந்திரன், பாணினிக்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்தவராதல் வேண்டும். அவ்வகையால், தம்முடைய தொல்காப்பியத்திற்கு, முதல் நூலாகப் பாணினியத்தைக் கொள்ளாது, அப் பாணினிக்கு முற்பட்டவராய இந்திரன் இயற்றிய ஐந்திரத்தைக் கொள்ளும் தொல்காப்பியர், பாணினிக்கு உரிய காலமாகச், சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களால் வகுக்கப்பட்ட கி. மு. 350க்கு முன்னர்