பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

தமிழர் வரலாறு

குருட்டு நம்பிக்கைகள் :

இனி, மக்களிடையே நிலவியிருந்த குருட்டு நம்பிக்கைகள் சில : காக்கை கரைந்தால், விருந்துவரும் என்ற நம்பிக்கை இன்றேபோல் அன்றும் இருந்தது. ‘’கணவன் பிரிவாற்றாத் துன்பக்கவலையால் மெலிந்துவிட்ட என் தோழியின் தோள்கள், அம்மெலிவு நீங்கிப் பண்டேபோல் ஆகிச் சிறப்புறுவதற்குத் துணை செய்யும் வகையில், கணவன் வருகையைக், கரைந்து முன் அறிவித்தது காக்கை ; அந்நல்லது செய்த காக்கைக்கு இடும் பலியாகத் தொண்டி நகரத்து வயல்களில் முற்ற விளைந்த வெண்ணெல் அரிசி கொண்டு சுடுசோற்றைத், திண்ணிய தேருக்கு உரிய நள்ளி என்னும் கொடைவள்ளலின் காட்டில் வாழும் ஆயர்களின் பல பசுக்களிடம் கொண்ட நெய்யைக் கலந்து, ஏழு கலத்தில் இட்டு வைத்தாலும், அது செய்த நன்றியை நோக்க, இப்பலி சிறிதாம்‘’ எனக் கூறுகிறாள் தலைவியின் தோழி ஒருத்தி.

‘’திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யில், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது; என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’’:

--குறுந்தொகை : 216

சகுனங்களிலான நம்பிக்கை அளவுமீறி இருந்தது: பறவைகளின் போக்கு, அவற்றின் குரல், வர இருக்கும் ஆக்கம், இழப்புக்களை அறிவித்துவிடவல்லன என உறுதியாக நம்பினர். ‘’புள்ளும், பொழுதும் பழித்தல்‘’ (புறம் : 204 10) என்ற வரியினைக் காண்க. தாம் எதிர்பார்த்துச் சென்ற பரிசில் கிடைக்காதபோது, அது தராது விடுத்த இரவலனைப் பழிக்காது, தாம் புறப்பட்டு வந்தபோது நிகழ்ந்த புள் நிமித்தம் காலக்கேடுகளையே பழிப்பர்; ;