பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

441

 கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரிய நாகரீகம், தமிழர் உள்ளத்துள், வெள்ளம்போற் பெருக்கெடுத்துப் பாய்ந்து அவர்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றி விட்டது. மற்ற செயல்பாடுகளோடு, ஆடல் பாடல்களும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டன. பழந்தமிழரின் இயற்கையோடியைந்த எளிய பண்ணிசை, ஆரியரின் கற்பனைத்திறம் வாய்ந்த பல்வேறு படிகளை உடையவாய மெல்லிசைகளுக்கு இடம் கொடுத்துவிட்டது, அவர்களின் பழைய ஆடல்களின் இடத்தை, ஆரியரின், எளிதில் விளங்கலாகாப் பல்வேறு வகையாகப் பிரிவுண்ட ஆடல்கள் பற்றிக்கொண்டன. பழைய ஆடல், ஒன்று, சொற்களின் துணை வேண்டாமல், மெய்ப்பாட்டின் மூலமாகவே, காதல், வீர உணர்வுகளை வெளிப்படுத்தும் : அல்லது, முழுக்க முழுக்க வழிபாடு குறித்த ஆடலாகும். ஆரிய நாகரீகத்தின் இடை நுழைவால், அக்கலையில், பல்வேறு நிலைகள் வளர்ந்துவிட்டன. ஆடல் பாடல் குறித்த இலக்கண நூல்களும் எழுதப்படலாயின. ஆனால், அந்நூல்கள். இப்போது அழிந்துவிட்டன. ஆனால், அக்கலைகளைக் குலத் தொழிலாகக் கொண்ட கலைஞர்களால், அவை பயிலப்பெறுவது குறித்த குறிப்புகள் பலவற்றைச் சிலப்பதிகாரம், தருகிறது. அதன் உரையாசிரியர்கள், அவை குறித்த விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். பண்டு ஆடல் நிகழ்ந்த இடம் ஊர் மன்றம், ஆனால், அது, சிலப்பதிகாரம் மூன்றாம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போலும் பல்நிலை ஆடரங்காக உருமாறி விட்டது. ஆனால், இம் மாற்றமெல்லாம், பெருநகரங்களில் இடம் பெற்றுள்ளனவே அல்லது சிற்றுார்களில் அன்று.

நகரங்கள்

உரோமானிய நாட்டுடன் நடத்திய வாணிகம் பெருமளவில் வளர்ந்துவிட்ட பின்னர், தமிழகத்தில் நகரங்கள் வளமுடையவாகவும், செல்வச் செழிப்புடையவாகவும் உயர்ந்துவிட்டன. அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,