பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம்-19 ன் பின் இணைப்பு:

காஞ்சீ மாநகர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இடம் பெற்றிருந்தாலும், பண்டைக் காலத்தில், அது, தமிழர் நாகரீகத்தைக் கொண்டிருக்கவில்லை; மாறாகச் சமஸ்கிருத நாகரீகத்தின் நடுநாயகமாகவே இருந்தது ; அது, தமிழ் அரசர்களாலும் ஆளப்படவில்லை; மாறாக ஆரிய ராஜாக்களாலேயே ஆளப்பட்டது? இக்கூற்று உண்மையா!

திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தம்முடைய “தமிழர் வரலாறு” நூலில், இவ்வாறு கூறியுள்ளார். (பக்கம் : 333-34) தம்முடைய இம் முடிவிற்கு அவர் காட்டும் தலையாய காரணம், பழந்தமிழ்ப் பாக்களில், காஞ்சி என்ற அதன் பெயரோ, அது ஆண்ட பழைய பல்லவ அரசர்களோ குறிப்பிடப்படவில்லை என்பது ஒன்றே, {பக்கம் : 333)

தமிழ்நாட்டின் எல்லைகளாகத், தலையாலங்கான்த்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய மாங்குடி மருதனாரும், அச்செழியனால் சிறை பிடிக்கப்பட்டுப் பின்னர்ச் சிறைவீடு பெற்று அரியணை அமர்ந்த யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய குறுங்கோழியூர் கிழாரும், “தென்குமரிவடபெருங்கல், குண, குட கடலா எல்லை” (மதுரைக்காஞ்சி : 70-71; புறம் : 17) எனத் தமிழகத்தின் வடவெல்லை, வடபேரிமயமாக இருந்திருக்கக் கூடுமோ, என ஐயுறத்தக்க வகையில் கூறியுள்ளனர்; என்றாலும், அவர்களுக்கு அது கருத்தன்று. அவர்கள் “வடபெருங்கல்” என்ற தொடரால் குறிப்பிடும் மலை, வேங்கடமலையே.

இவர்கள் காலத்துப் புலவர்கள் பலரும், இமயமலையின் பல்வேறு சிறப்புக்களையும், அம்மலைமுடியில், தமிழரசர்கள்