பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

தமிழர் வரலாறு

காண்க, அவ்வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாட்டில் வாழ்வார் வடுகர் எனப்பட்டனர்: அவ்வடுகநாடு, புல்லி, கட்டி போல்வார் ஆட்சிக்கு உட்பட்ட சிறு சிறு நாடுகளாகப் பிளவுண்டிருந்தது: அன்று தமிழின் வேறுபட்ட ஒரு மொழி பேசப்படுவது, அங்குதான் தொடங்கப்பட்டது. "புல்வி விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (அகம் : 61) "புல்வி தேன்தூங்கு உயர்வரை நன்னாட்டு உம்பர் வேங்கடம்" (அகம் : 393) ; "புல்லி காப்புடை நெடுநகர் வேங்கடம்" (அகம் , 209) "புல்லிக்குன்றத்து...மொழிபெயர் தேயம்". (அகம் : 295) "வடுகர் முனையது, பல்வேல் கட்டி, நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேயம்" (குறுந் : 1:1) என்ற இவ்வரிகள், மேற்கூறிய கூற்றிற்குக் காட்டவல்ல எண்ணிலா அகச்சான்றுகளுள் ஒரு சில.

ஆக, வேங்கடம் வரையான தென்னாடு முழுவதிலும் தமிழே வழக்கில் இருந்து வந்தது என்பது ஐயம் திரிபு அற. உறுதி செய்யப்படுவதாயிற்று.

தமிழ் வழங்கிய வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட அப்பெருநிலப்பரப்பு முழுவதும், மூவேந்தர் ஆட்சியே நிலவியிருந்தது. இதை, "வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு" என்ற தொல்காப்பியர் கூற்று: (பொருள் : செய்யுள் 74) உறுதி செய்வது காண்க.

தமிழகத்தின் தென் பகுதியைப் பாண்டியரும், அப்பாண்டி நாட்டிற்கு வடபால், வேங்கடம் வரையுள்ள எஞ்சிய தமிழகத்தை, இரு கூறுகள் ஆக்கி, மேற்குப் பகுதியைச் சேரரும், கிழக்குப் பகுதியைச் சோழரும் உரிமை கொண்டு ஆண்டு வந்தனர். இதைக், "குடபுலம் காவலர் மருமான் சூட்டுவன்" (47-49) "தென்புலம் காவலர் பெருமான்... செழியன்" (63-6.5) "குணபுலம் காவலர் பெருமான். செம்பியன்" (79.82) என்ற சிறுபாணாற்றுப்படை வரிகள் உறுதி செய்வது காண்க. -

மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது தமிழகம் எனக் கூறப்பட்டாலும், தமிழகத்தில், அம்மூவேந்தர் ஆட்சிக்கு